மழலை மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழலை மருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 செப்டம்பர், 2009

சிவம்!

அன்பு சிவம்!
அறிவு சிவம்!
ஆண்டவனும் சிவம்!
நம்பி நம்பி
வணங்கி வந்தால்
நம்மைக் காக்கும் சிவம்!
நல்ல சிவம்!
வெல்ல சிவம்!
உள்ள தெய்வம் சிவம்!
சொல்லிச் சொல்லி
வணங்கி வந்தால்
காக்கும் சதாசிவம்!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

சக்தி!

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்!
நாம் சக்தி
நாம் சக்தி
நாம் சக்தி நாம்!

அன்னை சக்தி
அன்பு சக்தி
அறிவு சக்தி ஆம்!
உன்னைக் காக்கும்
என்னைக் காக்கும்
உலகைக் காக்கும் ஆம்!

காளி சக்தி
மாரி சக்தி
கடவுள் சக்தி ஓம்!
கடலும் சக்தி
மலையும் சக்தி
மழையும் சக்தி ஓம்!

தாயும் சக்தி
தங்கை சக்தி
தருமம் சக்தி ஓம்!
நீயும் சக்தி
வணங்க வேண்டும்
சக்தி சக்தி ஓம்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 17 செப்டம்பர், 2009

முருகா!



முருகா! முருகா! முருகா!
மயிலில் வருவாய் முருகா!
மாம்பழம் தருவேன் முருகா!
மலர்களைத் தருவேன் முருகா!
பால்கொண்டு படைப்பேன் முருகா!
வேல்கொண்டு வருவாய் முருகா!
சேவல் கொடியோய் முருகா!
காவல் புரிவாய் முருகா!
தெய்வம் நீயே முருகா!
தேவன் நீயே முருகா!
சக்தியின் மகனே முருகா!
பக்தியில் வருவாய் முருகா!

பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அகரம் அம்மா!


அம்மம்மா
காலையிலே
எழுந்தம்மா
ஆசைமுத்தம்
தருவாளே!
நம்மம்மா
இரவம்மா
நடந்துவிட்டால்
பகலம்மா!
ஈகாட்டிப்
பல்விளக்கு
நல்லம்மா!
உன்னம்மா
உனக்காகத்
தோசைசுட்டாள்!
ஊட்டிவிட்டாள்!
தலைசீவிப்
பின்னிவிட்டாள்!
ஐயம் வந்தால்
அப்பாவைக்
கேளம்மா!
ஒற்றுமையாய்க்
கொடி வணங்கிப்
பாடம்மா!
ஓடிப்பாடி
விளையாடி
ஆடம்மா!
ஔவை போல்
நம்பாட்டி
தேடிடுவாள்!
அம்மா அப்பா
தெய்வமெனக்
கூறிடுவாள்!

பாத்தென்றல் முருகடியான்

சனி, 12 செப்டம்பர், 2009

மாதங்கள்!

சித்திரை வந்தால் நெய்பூசு!
வைகாசி வந்தால் கைவீசு!

ஆனியில் ஆற்றினில் தோணிவிடு!
ஆடியில் நின்றுநீ பாடிவிடு!

ஆவணி மாதம் அத்தை வந்தாள்!
புரட்டாசி மாதம் திரும்பிச்சென்றாள்!

ஐப்பசி மாதம் காற்றடிக்கும்!
கார்த்திகை தீபம் ஒளிகொடுக்கும்!

மார்கழி மாதம் குளிரடிக்கும்!
தைதை நாட்டியம் கால்படிக்கும்!

மாசியில் ஊசியில் நூலைவிட்டாள்!
பங்குனி ஆண்டெனும் முட்டையிட்டாள்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 10 செப்டம்பர், 2009

கிழமைகள்!

சூரியன் தானே
ஞாயிற்றுக் கிழமை!
சுற்றும் நிலவே
திங்கள் கிழமை!
தங்கை வாய்போல்
செவ்வாய்க் கிழமை!
தம்பி அறிவான்
புதன் கிழமை!
வெற்றி கொடுக்கும்
வியாழக் கிழமை!
வெள்ளி நிறமாம்
வெள்ளிக் கிழமை!
வாரத்தை முடிக்கும்
சனிக் கிழமை!
வரிசை படிப்பீர்
ஏழு கிழமை!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கால்!

குருவிக் கெல்லாம் ரெண்டுகால்!
குதிரைக் கெல்லாம் நான்குகால்!
மூன்று கால்கள் முக்காலி!
நான்கு கால்கள் நாற்காலி!
எட்டுக் கால்கள் பூச்சுகள்
எச்சில் வலைகள் பின்னுமாம்!
காலில்லாதப் பந்தினைக்
கண்ணன் உதைக்க உருளுமாம்!

பாத்தென்றல் முருகடியான்

புதன், 2 செப்டம்பர், 2009

எண்ணம்மா! எண்ணு!

அம்மா ஒண்ணு!
அப்பா ஒண்ணு!
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!

அன்பாய்ப் பாடம்
சொல்லும் எங்கள்
ஆசான் வந்தார் மூணு!

அக்கா கண்ணு
அண்ணன் கண்ணு
ரெண்டும் ரெண்டும் நாலு!

ஆனை பூனை
மானைக் பார்த்தால்
வாலும் காலும் அஞ்சி!

ஆறும் ஓடும்
அணிலும் ஓடும்
அஞ்சும் ஒண்ணும் ஆறு!

வானுல் வந்த
வில்லில் தோன்றும்
வண்ணம் கண்டால் ஏழு!

தாத்தா பாட்டுப்
பாடும் போது
தட்டும் தட்டு எட்டு!

எட்டி எட்டி
நடந்த தம்பி
லட்டு தின்பான் ஒன்பது!

பஞ்சுக் கையில்
காலில் விரல்கள்
அஞ்சும் அஞ்சும் பத்து!

பாப்பா தம்பி
சிரிக்கும் போது
பல்லும் முத்து முத்து!

பாத்தென்றல் முருகடியான்

சனி, 29 ஆகஸ்ட், 2009

சூரியன்!

காலையில் வருவான் சூரியன்!
கடல்மேல் வருவான் சூரியன்!
மாலையில் மறைவான் சூரியன்!
மலையினில் மறைவான் சூரியன்!

கடலைச் சுடுவான் சூரியன்!
மழையைத் தருவான் சூரியன்!
நாளும் வருவான் சூரியன்!
நம்மைக் காப்பான் சூரியன்!

பாத்தென்றல் முருகடியான்

புதன், 26 ஆகஸ்ட், 2009

குருவி!

சின்னக் குருவி!
சிட்டுக் குருவி!
துள்ளிப் பறக்கும்!
நல்ல குருவி!

பச்சைக் குருவி!
பாடும் குருவி!
கீச்சுக் கீச்சென்று
கத்தும் குருவி!

மரத்தில் இருக்கும்
மஞ்சள் குருவி!
துரத்திப் பிடித்தால்
பறக்கும் குருவி!

வண்ணக் குருவி
வம்பு செய்யாது
தின்னக் கொடுத்தால்
தேடும் குருவி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

பூமலை!


பச்சைமலை பசுமலை!
பாட்டுப் பாடும் குயில்மலை!
கீச்சுக் கீச்சுக் குயில்கள்
கிளையில் தாவும் திருமலை!

தாமரைப்பூக் குளத்திலே
தவளை நீந்தும் பூமலை!
பூமரத்தின் அடியினில்
புல்நிறைந்த பூமலை!

பூக்கள் பூக்கும் பூமலை!
பொழுது போக்கும் பூமலை!
காக்கை கத்தும் பூமலை!
காண வேண்டும் பூமலை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

கைவீசு!


கைவீ சம்மா! கைவீசு!
கண்ணே! கனியே! கைவீசு!
கைவீ சம்மா! கைவீசு!
காலையில் எழுந்து கைவீசு!

பூவே! பூவே! கைவீசு!
பொய்சொல் லாதே! கைவீசு!
பொன்னே! மணியே! கைவீசு!
போட்டிப் போட்டுக் கைவீசு!

நடக்க நடக்க கைவீசு!
நாளும் நாளும் கைவீசு!
அடுக்கு விரலால் கைவீசு!
அன்பைக் காட்டிக் கைவீசு!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கொடி பறக்குது!

ஆடி ஆடிப் பறக்குது!
அசைந்து அசைந்து பறக்குது!
கம்பத்திலே பறக்குது!
காற்றில் ஆடிப் பறக்குது!

நிலவைத் தூக்கிப் பறக்குது!
நீண்ட கொடியும் பறக்குது!
சிவப்பு வெள்ளை நிறத்திலே
சிங்கைக் கொடியும் பறக்குது!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எம். ஆர். டி!


பயணம் போகும் எம்.ஆர்.டி!
பாட்டி போகும் எம்.ஆர்.டி!
பாம்பைப் போலும் வளைந்தோடிப்
பறந்தே போகும் எம்.ஆர்.டி!

கம்பியில் ஓடும் எம்.ஆர்.டி!
கரண்டால் ஓடும் எம்.ஆர்.டி!
தம்பியும் நானும் அப்பாவும்
தம்பினிஸ் போகும் எம்.ஆர்.டி!

நீருள் ஓடும் எம்.ஆர்.டி!
நிலத்துள் ஓடும் எம்.ஆர்.டி!
சீறிப் போகும் எம்.ஆர்.டி!
சிங்கப் பூரின் எம்.ஆர்.டி!

குப்பைப் போடக் கூடாது
கோபம் கொள்ளும் எம்.ஆர்.டி!
அப்பா கையைப் பிடித்தால்தான்
அழகாய்ப் போகும் எம்.ஆர்.டி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஆனை!


ஆனை யைப்பார் ஆனை!
அம்மா! பெரிய யானை!
கன்னங் கரிய யானை!
கால்கள் பெருத்த யானை!

கொம்பு முளைத்த யானை!
கோவிலில் நிற்கும் யானை!
விலங்குத் தோட்ட யானை!
வித்தைக் காட்டும் யானை!

கரும்பு கேட்கும் யானை!
காது பெருத்த யானை!
தும்பிக் கையால் நம்மைத்
தொட்டுப் பார்க்கும் யானை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

மணி ஓசை!

டிங்டாங் டிங்டாங் மணியோசை!
டிங்டாங் டிங்டாங் மணியோசை!
‘ச்சிங்சோங்’ வீட்டு மணியோசை!
‘செந்தில்’ வீட்டு மணியோசை!

கிணிகிணி கிணிகிணி மணியோசை!
கடிகாரம் ஒலிக்கும் மணியோசை!
திருடரைப் பிடிக்கும் மணியோசை!
தீயை அணைக்கும் மணியோசை!

கோயிலில் கேட்கும் மணியோசை!
குமரன் சிரிப்பது மணியோசை!
காலையில் எழுப்பும் மணியோசை
கடவுள் ஓசை மணியோசை!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிள்ளைப் பூக்கள்!

பூக்கள் நீங்கள் பிள்ளைகள்!
புன்னகை நிலவின் வில்லைகள்!
காக்கும் விடியல் காலைகள்!
கலைப்பைப் போக்கும் சோலைகள்!

(பூக்கள்…)

அன்பு சுரக்கும் நீரூற்று!
அணைத்துத் தவழும் இளங்காற்று!
இன்பம் விளைக்கும் புதுப்பாட்டு!
இறைவன் பாடும் தாலாட்டு!

(பூக்கள்…)

தத்தி நடக்கும் தாமரை!
தத்துவம் சொல்லும் பொதுமறை!
சத்தியம் பூக்கும் செடிகளே!
சந்தனக் குங்குமப் பொடிகளே!

(பூக்கள்…)

சிறகு முளைக்கும் கிளிகளே!
சிங்கைத் தாயின் விழிகளே!
உறவைப் பாடும் குயில்களே!
ஓடி ஆடும் மயில்களே!

(பூக்கள்…)
பாத்தென்றல் முருகடியான்

புதன், 29 ஜூலை, 2009

நாட்டை நாடு!

ஒன்றே நாடு!
ஒன்றே மக்கள்!
ஒன்றே சிங்கப்பூர்!
என்றே பாடு!
என்றும் பாடு!
இனிக்கும் சிங்கப்பூர்!

(ஒன்றே…)

புகைத்தால் உனக்குக் கேடுவரும்!
பொய்சொன் னாலும் கேடுவரும்!
பகைத்தால் நமக்குள் கேடுவரும்!
பண்பும் பணிவும் வெற்றிதரும்!

(ஒன்றே…)

காலையில் எழுந்து குளித்துவிடு!
கடமையை உயிராய் மதித்துவிடு!
சோலையில் நடந்து பயிற்சியெடு!
சொன்னதைச் செய்ய முயற்சியெடு!

(ஒன்றே…)
பாத்தென்றல் முருகடியான்

சனி, 25 ஜூலை, 2009

அமைச்சராகலாம்!

கண்ணே! கண்ணே!
கண்ணின் மணியே!
பொன்னே! பொன்னே!
பொன்னின் ஒளியே!
உன்னை நம்பி
நாடும் இருக்குதிங்கே!

(கண்ணே…)

நாளைக்கு நீயொரு
மந்திரி ஆவாய்!
நல்ல மருத்துவம்
செய்திடப் போவாய்!
வேளைக்குக் கல்வி
கற்றிடு தம்பி!
வெற்றி உனக்கே
நிச்சயம் நம்பி!

(கண்ணே…)
பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 21 ஜூலை, 2009

அம்மா சொல்கேள்!

அம்மா சொல்கேள் அன்போடு!
ஆசான் சொல்கேள் அறிவோடு!
சும்மா இருந்தால் புகழேது?
சோம்பல் நீக்கி நலம்தேடு!

(அம்மா…)

கதிரவன் வருமுன் எழுந்துவிடு!
கருத்துடன் பாடம் படித்துவிடு!
புதுப்புதுக் கலையில் பயிற்சியெடு!
பொய்மொழி விலக்கிப் பணிந்துவிடு!

(அம்மா…)
பாத்தென்றல் முருகடியான்