வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

நடுவு நிலைமை!

ஆங்கிலம் பேசு சிங்கிலம் வேண்டாம்
அரசே சொல்கிறது! -நம்மைத்
தாங்கிய தமிழைத் தணலி லெறிந்துத்
தமிங்கிலம் வெல்கிறது!

கடமை என்றாலும் தந்தையும் மகனும்
காட்டுக நன்றியென்றார்! -அந்த
உடைமையைத் தூக்கி உதறுதல் தமிழ்த்தாய்க்(கு)
உதவுதல் ஆகிடுமா?

மொழிகளைப் பிரித்து முரண்பகை வளர்த்து
மோதுவ தெதனாலே? –உண்மை
வழியறி யார்ப்பிறர் வாய்மொழிக் கலப்பதன்
வழிசெலல் அதனாலே!

செந்தமிழ் எழுதிப் பேசு என்போரிடம்
சினம்பகை உறுவதுமேன்? –என்றோ
வந்தவர்ப் பழிவழி வாழ்ந்து வதங்கிய
வழக்கத்தின் நிலையாலே!

தாடியை மம்மியை நீக்கெனச் சொல்வது
தாடியின் மேல்பகையா? –உன்தாய்
வாடிடு வாளென வழக்குரைத் தாலவர்
வன்பகை யாளர்களா?

உன்னுரி மைக்கெட ஒருப்படு வாயா?
உன்குடி உயர்ந்திடுமா? –தாயவள்
தன்னுரி மைக்கெடத் தன்மகன் நினைப்பது
தமிழுக்குச் சிறப்பிடுமா?

கழிவைக் கொட்டிடும் குப்பைத் தொட்டியாய்க்
கனித்தமி ழாகுவதோ? –அந்த
இழிவைச் செய்திட வேண்டா மென்பவர்
எரிதழல் வீழுவதா?

மொழியறி யாதவர் எழுதுக என்றிங்(கு)
யாரடித்தார் கொல்லோ? –எந்தப்
பழியையும் நீக்குதல் பகுத்தறி வென்பதைப்
படித்தறி யாக்கல்லோ?

கெடுப்பவர் கெடுப்பவை யாரெவை என்பதைக்
கேட்டுண ராவரையில் -நம்மை
அடுத்தவர் பகையுற(வு) என்பதை அறிந்திடும்
அறிவுக்(கு) இரும்புத்திரை!

குளத்தைப் பகைத்தவன் கால்கழு வாமலே
கோவிலுள் போவதனால் -அந்தக்
குளத்துக்குக் கேடெனும் கோள்விடு! நடுநிலைக்
குணமடை வாயதனால்!

பாத்தென்றல்.முருகடியான்.

கருத்துகள் இல்லை: