புதன், 11 பிப்ரவரி, 2009

நீடுவாழ நெறிவேண்டும்!

நாலும் நடந்து முடிந்த பின்னே
ஞானம் தலைக்கு வந்ததே! -அந்த
ஞானத் தாயின் கண்ணை மூட
நரையுந் திரையும் முந்துதே!

முறுக்கு கொண்ட கையும் காலும்
செருக்கைத் தூக்கி நடந்தன... -குருதிப்
பெருக்கை இழந்த உடலைத் தாங்குந்
தடியில் லாமல் கிடந்தன...

கல்லைத் தின்றுச் செரிக்கும் வயதில்
குயவன் நினைவுத் தோன்றிடா! -முத்துப்
பல்லை இழக்கும் வரையில் அந்தப்
பகலன் அருளை வேண்டடா!

அணையைக் கட்டித் தடுத்தி டாமல்
ஆற்று வெள்ளம் பாய்ந்தது! -முற்றிக்
கனியும் முன்னம் வெம்பிச் சுருங்கிக்
காலன் காலில் சாய்ந்தது!

போட்டி போட்டுப் புலனை ஆட்டுப்
பொறியி லிட்டுச் சுற்றினோம்! -மதி
பூட்டுப் போடும் திறனில் லாமல்
பொய்யைத் தானே பற்றினோம்!

நகைய ணிந்த காதும் மூக்கும்
பகைக ளாகிப் போயின... -நேற்று
வகைவ கையாய்க் காட்சி கண்ட
விழிகள் இருள லாயின...

குன்று தூக்க நின்ற தோள்கள்
செண்டு தூக்க அஞ்சின... -இன்றும்
பண்டி ருந்த பசுமை தேடி
உறுப்ப னைத்தும் கெஞ்சின!

கோடு தாண்டிப் போன தாலே
இராம காதை வந்தது! -மாந்தர்
நீடு வாழப் பாடஞ் சொல்லச்
சுழலு முலகப் பந்திது!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: