திங்கள், 16 பிப்ரவரி, 2009

நிலவேசொல்!

மையாடைக் குள்ளுடலை
மறைத்திருக்கும் வெண்ணிலவே!
ஐயாஅச் செங்கதிரோன்
அனலணைக்கும் பொன்னிலவே!

கார்குழலை வானாக்கி...
கதிரொளியை முகமாக்கி...
ஊர்புகழ வரும்நிலவே!
உன்னிடத்தில் சிலகேள்வி!

உப்பலத்தில் பூவதைப்போல்
உயர்வானில் மீன்கூட்டம்...
அப்பளம்போல் நீபுடைக்க
அடுப்பெதுவோ? நெய்யெதுவோ?

நெருப்பிட்ட பானைநீர்
நெருப்பைப்போல் கொதித்திருக்க
வெறுப்புற்றுக் கதிர்க்கனலை
வெளிக்காட்டா வியப்பென்னே?

அல்லிப்பூ நீமலர்த்த...
முளரிப்பூ கதிர்மலர்த்த...
வெள்ளிக்காய் எம்மலரும்
விரியாத வியப்பென்னே?

பசிக்குணவே இல்லாமல்
பலகோடி பேர்மடிய
விசுக்கெனவான் கோளனுப்பும்
வீண்செலவு ஏன்நிலவே?

மண்ணம்மா பெற்றதுதான்
மானிடமும் பயிரினமும்
உண்ணுங்கள் எனக்கொடுக்க
ஒருவருக்கும் மனமிலைஏன்?

விண்ணம்மா விடமிருக்கும்
விழுப்பொருளைத் திருடுதற்(கு)
இன்னும்மா னிடம்முயலல்
ஏனம்மா? சொல்நிலவே!

நாய்களுக்கு மெத்தையிட்டு
நளபாகச் சோறுமிட்டு
மாய்கின்ற மனிதருக்கு
மணிச்சோறு தராததுமேன்?

பெண்ணுக்கு நீயுவமை!
ஆணுக்குப் பகலுவமை!
மண்ணுக்குள் பெண்ணாணின்
மதிப்பொன்றாய் சொல்லுவதுமேன்?

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: