சனி, 21 பிப்ரவரி, 2009

பறவைகளே!

பட்டுச் சிறகை விரிக்கின்றீர்
பவள அலகால் கொறிக்கின்றீர்
எட்டுத் திசையும் பறக்கின்றீர்
இன்னிசைத் தேனைச் சுரக்கின்றீர்

கேள்விக் குறிபோல் சிலமூக்கு
கிளருங் கால்களில் உகிரூக்கு
வாள்போல் அலகுடன் வாயாச்சி
வான்வெளி பறப்பதும் ஆராய்ச்சி

நெல்லிக் காய்போல் தலைகொண்டீர்
நீள்மரக் கிளைகளில் துயில்கொண்டீர்
பள்ளிக் குழந்தைகள் போலாகிப்
பகல்வரு முன்னே பறக்கின்றீர்

கையை விரித்துக் கால்மடக்கிக்
கண்படுந் தூரம் பறந்துவிட்டு
பையவே மண்ணில் இறங்குவதைப்
பார்த்தே படைத்தார் வானூர்தி

துமுக்கிப் பேரொலி கேட்டவுடன்
துடித்துப் பறக்கும் பறவைகளே
தமுக்கித் திரியா நற்குணங்கள்
தாங்கிய நீங்களும் உயர்திணையே!

கழுகைக் கண்டால் அஞ்சுகின்றீர்
காதலில் குஞ்சினைக் கொஞ்சுகின்றீர்
பழுதறி யாமல் வாழ்கின்றீர்
பகுத்தறி வாளரை ஆள்கின்றீர்!

பாத்தென்றல் முருகடியான்

கருத்துகள் இல்லை: