வியாழன், 26 பிப்ரவரி, 2009

படிப்படியாகப் படியேறு!

இருவரிக் குதிரை
ஏறியமர்ந்தால்
குருவரி நீ, மதி
குடைப்பிடிக்கும்!

நூலடி நடந்து
பார்த்தவருக்கே
காலடி கணக்கைக்
கண்ணறியும்!

அகத்தை அறிந்தால்
அண்டவெளியெனும்
புறத்தைப் புரிந்திடப்
புலன்கிடைக்கும்!

ஏலக் காயால்
இவ்வுடல் சிறக்கும்
ஏலாதி யாலுளம்
எழுந்துநிற்கும்!

திரைப்படத் துறையால்
நரைப்படும் மனமும்
முறைப்பட நன்னூல்
முகம்பார்ப்போம்!

ஒல்காப் புகழில்
உயர்ந்திட நினைத்தால்
தொல்காப் பியரின்
துணைசேர்ப்போம்!

அருந்தொகை யாக
அகவாழ்விருக்க
குறுந்தொகை கற்போம்
குலம்சிறக்கும்!

மெஞ்ஞா னத்தின்
மேன்மைவிளக்கிடும்
மென்பொருள் போன்றது
திருமந்திரம்!

விஞ்ஞா னத்தின்
வெற்றித் திறவுகோல்
வியனுல களித்த
மின்னெந்திரம்!

மும்மணி நாண்மணி
கோவை உலாவுடன்
பன்மணித் திரளாம்
சிலம்பணிக!

மூதுரை கேட்டு
நல்வழி நடந்தால்
வாதுரை செய்திடும்
வாக்குண்டாம்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: