சனி, 31 ஜனவரி, 2009

முப்பாலில் கடைந்த நெய்!

ஓரேழு அசைகள் கொண்டே
உருவான பொதுநூற் கண்டை
ஈரேயும் இரண்டு பேறும்
இனியகுறள் வாழ்வால் சேரும்!
ஓரேயுப் பிறவிக் குள்ளே
ஒண்டாது துயரச் சொல்லே!
பாரேயும் படித்தற் கென்றே
பயந்தாளே தமிழ்த்தாய் அன்று!

முப்பாலில் கடைந்த நெய்நூல்
மூதண்ட மளந்த மெய்நூல்
ஒப்பாதல் இதற்கொண் றில்லை
உலகுக்கோர் அறப்பூங் கொல்லை!
உப்பாலை கடல்சூழ் வையம்
ஓதத்தேன் குறளால் உய்யும்!
எப்பாழும் இதனால் நையும்
எழுதியதெம் தேவன் ஐயன்!

பசும்புல்லும் உயிர்கள் யாவும்
படைக்கின்ற மூலம் தன்னை
விசும்பின்நீர், அமுதம் என்றே
விளம்பியவன் குறளா சானே!
குசும்புள்ள இன்பப் பாலைக்
குடித்தாடிப் பொருட்பால் தேட
அசும்பில்லா அறக்கோல் இந்த
அகிலத்தில் குறள்போல் ஏது?

பத்துப்பா தலைப்பிற் கென்று
பழச்சாறு பிழிந்த தைப்போல்
எத்திக்கும் மாந்தர் நெஞ்சம்
ஏற்கின்ற பொதுமைச் செங்கோல்
வைத்துள்ள வள்ளு வம்தான்
வானோர்க்கும் பிடித்த நன்னூல்!
தித்திக்கும் தேன்பா லாக
தேவர்சொற் குறளே மெய்நூல்!

தங்கப்பூர் தமிழ்த்தாய் வாழும்
தாமரைப்பூ, தக்கார் ஆளும்
சிங்கப்பூர் ‘அதிபர் நாதன்’
சிலைதிறக் கின்ற இந்நாள்
இங்குற்ற தமிழர்க் கெல்லாம்
எழுச்சிநாள் இனியப் பொன்னாள்!
பொங்கட்டும் குறள்போல் ஆட்சி
பொழியட்டும் ஐயன் போற்றி!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: