திங்கள், 26 ஜனவரி, 2009

மாலை மயக்கம்!

நேற்றெறிந்த மாலையொன்று
தெருவில் கிடந்தது! -வீடு
மாற்றிக்கொண்டு கதிரும்மாலை
மலைமறைந்தது!

சூடுபட்ட மாலைக்காய்ந்து
சுருங்கிவிட்டது! -அந்த
ஏடுதொட்டுக் காற்றசைக்க
மாலைநெளிந்தது!

விளக்கிலாஅத் தெருவிலொருவன்
நடந்துவருகிறான்! -பாம்பு
விழுந்தசைந்து கிடப்பதாக
எண்ணிமருள்கிறான்!

தாண்டிப்போகத் துணிவுமின்றித்
தவித்துநிற்கிறான்! -அச்சம்
தீண்டித்தீண்டி உயிருமுடலும்
துடித்துநிற்கிறான்!

அந்தநேரம் வந்தஒருவன்
கையில்விளக்கொளி! -பட்டு
அரவம்மாறி மாலையாகி
தந்ததறிவொளி!

ஞானமென்ற வெளிச்;சமின்றி
நடக்கும் போதெல்லாம் -உண்மை
நாமறிந்து கொள்வதில்லை
வாழும்நாளெல்லாம்!

நீரைமூடிக் கொண்டிருக்கும்
மண்ணைப்போன்றது! -நமது
நிழலைப்போலுந் தொடருகின்ற
இருளின்இனமது!

பாத்தென்றல்.முருகடியான்

3 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

/ஞானமென்ற வெளிச்;சமின்றி
நடக்கும் போதெல்லாம் -உண்மை
நாமறிந்து கொள்வதில்லை
வாழும்நாளெல்லாம்!/

அருமை நண்பரே

பாத்தென்றல் முருகடியான் சொன்னது…

நன்றிகள் நண்பரே!

உமா சொன்னது…

அற்புதம்.