சனி, 10 ஜனவரி, 2009

குயில் அண்ணன்!

வேரை மறந்த
விழுதுக லாகி
வீணே கழிக்கின்றார் நாளை! -சில
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்
தேரை இழுத்திடுந்
தாம்புக ளானால்
தமிழ்,மலர்ப் பூத்திடுஞ் சோலை! -அதில்
தங்குந் தமிழ்க்கதிர் காலை!

வண்ணம் படித்திட
எண்ணம்வந் தால்கவி
அன்னம் நடந்திடும் பாட்டில்! -குயில்
அண்ணன் பிறப்பானின் நாட்டில்! -புதுத்
தென்னங் குரும்புகள்
முற்றிக் கனிந்திடத்
தேவன் திருக்குறள் ஏட்டில்! -கற்றுத்
தேர்ந்திருப் போம்கவிக் கூட்டில்!

என்னை நன்றாய்
இறைவன் செய்தனன்
தன்னைத் தமிழ்செயு மாறாம்! -அந்தத்
தத்துவ மேதமிழ் வேராம்! -தமிழ்
அன்னை நிலைப்பதும்
அழியா திருப்பதும்
அவளுக்கு நம்கை மாறாம்! -இதை
அறிந்தால் தமிழ்பெறும் பேறாம்!

பாத்தென்றல்.முருகடியான்!

1 கருத்து:

ers சொன்னது…

நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/