வெள்ளி, 16 ஜனவரி, 2009

மண்ணேகேள்!

ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட
அழகு மண்ணம்மா! -உன்
அடிவ யிற்றில் நெருப்புக் குண்டம்
இருப்ப தென்னம்மா?
வாழி போற்றி நாங்கள் பாட
மகிழும் மண்ணம்மா! -கொடு
வாய்தி றந்து நெருப்பு வாந்தி
எடுப்ப தென்னம்மா?

சின்ன கொண்டை பெரிய கொண்டை
மலைக ளானதோ? -நீ
சீறும் போது வேர றுக்கும்
அலைக ளானதோ?
வண்ணங் கொண்ட குன்ற னைத்தும்
மார்ப கங்களோ? -அதில்
வழிந்து சிந்தும் அருவி எல்லாம்
பாற்சு ரங்களோ?

மாழை நூறு மடிசு மந்து
மலர்கள் பூக்கிறாய்! -அதை
மனிதன் தோண்டி எடுக்கும் போது
பொறுமை காக்கிறாய்!
ஏழை நாங்கள் தூங்கும் போது
எட்டி உதைக்கிறாய்! -உன்
இனிய மக்கள் உயிரை உடலை
ஏனோ புதைக்கிறாய்?

மேனி எங்கும் மயிர்க ளாக
பயிர்க ளானதோ? -அதை
மேய்ந்தி ருக்க வாழ்ந்தி ருக்க
உயிர்க ளானதோ?
தானி யங்கும் தன்மை அந்தத்
தலைவன் தந்ததோ? -எங்கள்
தமிழும் அந்த முறையில் தோன்றி
நிலைத்து நின்றதோ?

உனக்குக் கூட நொடித்துப் போகும்
கால முள்ளதோ? -உன்
உறவை நம்பும் மனிதப் பயிரை
அழித்தல் நல்லதோ?
கணக்கில் லாமல் உயிரைத் தாங்கும்
காதல் கண்ணம்மா! -எம்
கால்மி திக்கப் பொறுத்த ருள்க!
நன்றி மண்ணம்மா!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: