செவ்வாய், 6 ஜனவரி, 2009

குழப்பம்!

எங்கே மாந்தன்
துயருற் றாலும்
என்மனம் துடிப்பதுமேன்?
அங்கே அவரவர்
உறவென மாறி
விழிநீர் வடிப்பதுமேன்?

குண்டுகள் வெடித்துத்
துண்டுகள் ஆகிக்
குலையும் மாந்தரினம்...
ஒன்றுமே செய்திட
முடியா தின்னுயிர்
உடலேன்? அவமானம்!

வாடிய பயிரால்
வாடிய மனதில்
வன்மம் உறைவதுமேன்?
தேடிய உறவும்
திருவும் திறனும்
தேய்ந்தே மறைவதுமேன்?

விடுதலைக் காக
உயிர்விடத் துடிக்கும்
விறலார் ஒருபுறமும்
கெடுதலைச் செய்தே
புகழ்பெற நினைக்கும்
கீழோர் மறுபுறமும்...

மாந்தர்க ளாக
ஈந்தவர் யாரோ?
மலர்மே லுற்றவனோ?
நீந்திய இலைமேல்
நின்று வளர்ந்து
நெடுமா லானவனோ?

அரக்கரின் கொட்டம்
அழித்திடும் கண்கொண்(டு)
அரனார் வரவென்றோ?
சுரக்கிற முலைப்பால்
எதியோப் பாவில்
சூலியுந் தரலன்றோ?

அறிவதன் வளர்ச்சி
அணுவென வெடிச்சி
அழிவே வரலாறு!
பொறிபல நூறு
பூத்தநற் பேறு
புன்மையே பெருங்கூறு!

மறக்கப் படமனம்
வைத்தவன் ஏனோ
மடிக்கும் மதிகொடுத்தான்?
இறக்கும் உடல்!உயிர்
எடுக்கும் மறுவுடல்
என்றேன் விதிபடைத்தான்?

பாத்தென்றல் முருகடியான்!

கருத்துகள் இல்லை: