புதன், 20 ஆகஸ்ட், 2008

பொய்யடா பொய்யடா பொய்!

ஆணவக் காற்றை அடைத்துக் கிடப்பதனால்
நாணச் சுரப்பி நரம்பறுப்பால் -வான(ம்)வரை
உய்யடா என்றே உதைத்தாலும் பந்தனையர்
பொய்யடா பொய்யடா பொய்!

ஓட்டைக் குடநீர் ஒழுகிக் குறையவில்லை
ஏட்டில் எழுத்தாய் இருப்பதுபோல் -காட்டித்தன்
மெய்யை நிலைநாட்டி மெய்யை அழிக்குமுயிர்
பொய்யடா பொய்யடா பொய்!

அச்சம் அருள்நன்றி ஆக்கிய ஆண்டவனை
மெச்சிப் புனைகதையால் மேம்படுத்தி -உச்சவரைப்
பொய்ச்சேர வைத்த புலமை அனைத்துமிங்கே
பொய்யடா பொய்யடா பொய்!

கண்ணாடி வேலியிட்டுக் காத்தாலும் நெய்விளக்கம்
உண்ணாடிக் காற்றின்றி ஓய்ந்துவிடும் -மின்னோடி
வெய்யனொளிப் பாய்ச்சும் விளக்கில் வளிப்புகுந்தால்
பொய்யடா பொய்யடா பொய்!

தேடிப் பொருள்சேர்த்துத் தேவைஎல் லாந்தீர்த்துக்
கூடிக் களிக்கும் குடும்பநிலை -வாடிக்கை
நெய்யற்றால் மாயும் விளக்கும் உறவுகளும்
பொய்யடா பொய்யடா பொய்!

தன்மானம் போற்றித் தமிழ்மானம் விட்டுயர்தல்
பொன்வானைச் சேர்புள்ளின் பொய்த்தோற்றம் -நன்மானம்
தெய்வத் தமிழ்க்காப்பே தேடும் பிறவனைத்தும்
பொய்யடா பொய்யடா பொய்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: