வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

இட்டவடி நோவும் இவர்க்கு!

கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூட
நெய்யளந்த வாழை நெடுந்தூணால் -பையநலங்
கெட்டால் துடிக்காத கீழ்மை மகளி(ர்)மனை
இட்டவடி நோவும் இவர்க்கு!

பட்டஅடி நூறு படப்போவ தைநூறு
சுட்டவடுக் கண்டால் சுடுநெருப்பின் -பட்டறிவு
விட்டு விடாதென்றும் வெல்லறிவார் முன்வஞ்சம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்
மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்
திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!
முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்
தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்
இட்டவடி நோவும் இவர்க்கு!

உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்
அல்லதைத் தேடி அலைவார்!கால் -முள்ளாகிப்
பட்டவிட மெல்லாம் பழுதாகும் அக்கயவர்
இட்டவடி நோவும் இவர்க்கு!

முயலுக்குக் கால்மூன்று முட்டாளுக் கேழறிவு
கயலுக்குக் கால்தேடிக் காட்டுவார்! -செயலூக்கிச்
சுட்டெடுக்குஞ் சூதர் சுருட்டுப் புகைவிடுவார்
இட்டவடி நோவும் இவர்க்கு!

பாத்தென்றல்.முருகடியான்.

கருத்துகள் இல்லை: