புதன், 10 டிசம்பர், 2008

அதிகம்!

நாத்திகனாய் இருந்ததனால்
நானிழந்தத் தமிழதிகம்!
நாத்திகனாய் இருந்ததனால்
நானறிந்த அறிவதிகம்!
நாத்திறத்தார் சொல்,எழுத்தால்
நடைமயங்கி நானெடுத்த
பாத்திறத்தை அறியாமல்
பா,திறம்போ னதேயதிகம்!

காதலெனுந் தேனுணர்வில்
கடமைமறந் தேனதிகம்!
சேதமிடும் விலங்குணர்வில்
சேர்ந்திருந்த நாளதிகம்!
பேதைகளைப் பேரறிவுப்
பேழையென்ற நினைப்பதிகம்!
ஏகமிலாப் பொதுவுணர்வில்
இருந்ததுதான் மிகஅதிகம்!

எல்லார்க்கும் நன்மைசெய்ய
எண்ணுகின்ற குணமதிகம்!
நல்லராய் நினைத்ததனால்
நானிழந்த பணமதிகம்!
புள்ளார்க்கும் மனக்காவாய்
பூத்திருக்கும் கவியதிகம்!
கள்வடிக்கும் செந்தமிழைக்
காப்பதிலென் உணர்வதிகம்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: