சனி, 16 ஆகஸ்ட், 2008

மெய்யடா மெய்யடா மெய்!

தங்கத் தமிழ்திருடித் தம்மொழிபோல் மாற்றியதும்
பொங்கல்புத் தாண்டழிக்கும் பொய்யுரையால் -தங்கருத்தை
மெய்யாக்கி னாரென்ற மெய்யறிஞர் வாணரின்*சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

பன்றியுடன் சேர்ந்த பசுவின் கதையாகிக்
குன்றிக் குலமழிக்கும் கோடறியாய் -இன்றும்நாம்
தெய்வத் திருப்பெயரால் தேட்டம் இழப்பதெல்லாம்
மெய்யடா மெய்யடா மெய்!

ஒன்றே குலமென்(று) உயர்ந்த மரபணுவில்
நன்றே புரிவதுபோல் நஞ்சேற்றி -இன்றுவரை
உய்வாரை நீங்க உரைத்தத் திருக்குறளே
மெய்யடா மெய்யடா மெய்!

கண்டாலும் கேட்டாலும் கள்ளுண்ட போதைத்தரும்
பெண்டிற் பெருஞ்சிறப்பே பேரின்பம் -என்றிருக்கும்
மெய்யைப் புறமொதுக்கி மெய்யறிவுப் பெற்றவர்சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

தற்புகழ்ச்சிப் பேசித் தருக்கித் திரிவார்முன்
பொற்புகழ்ச்சிச் சொன்னால் புரிந்திடுமா? -நற்புகழைச்
செய்யடா செய்கவெனச் செப்புவதால் தீங்குவரல்
மெய்யடா மெய்யடா மெய்!

வாணர்* -தேவநேயப் பாவாணர்

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: