வியாழன், 1 ஜனவரி, 2009

கேள்போல் பகை!

ஒன்றுபட மாட்டார்; உருப்படவும் மாட்டாமல்
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! -மண்டுகளாய்
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்
தண்டுகளைத் தண்மலரென் பார்!

மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? -தாவடிமைப்
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்
தட்டேந்து வார்தமிழ ரே!

தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு -மட்டிகளாய்
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்
மண்ணே மறத்தமிழர் மண்!

சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் -வீரியமே
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை
நல்லாராய் நம்புவதேன் நாம்?

ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் -பாதிக்கப்
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!

பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் -கள்ளமுடன்
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்
காற்றைக் கயிறாக்கல் காண்!

பாத்தென்றல்.முருகடியான்

கருத்துகள் இல்லை: