வெள்ளி, 19 டிசம்பர், 2008

கவிதை!

குரங்கென ஒருபொருள் குறிக்கிறது
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது
திறந்தருங் கதையது விளைக்கிறது
திரண்டநல் விதையதில் முளைக்கிறது
வரந்தரும் “தை”யெனும் திங்களையும்
வைத்தவள் தைத்தவள் தையலவள்!
ஆறந்தரும் முனைவரின்ழூ விளக்கமிது
அடுத்தொரு முறையிலும் விளங்குமிது!

முதலெழுத் தழித்தால் விதையாகும்
நடுவெழுத் தழித்தால் கதையாகும்
முதலும் நடுவும் அழித்தால் “தை”
வினையும் பெயரென வருவாள்தை
முதலிரண் டெழுத்தில் பாட்டுவரும்
முள்மர மேறும் குரங்குவரும்
முதல்தாய் மொழியின் பெருமையிது
மூன்றெழுத் தின்ப அருமையிது!

முனைவர்- முனைவர் சுப.திண்ணப்பன்

பாத்தென்றல்.முருகடியான்

செவ்வாய், 16 டிசம்பர், 2008

இறையருளோ?

நாயர் பிடித்த புலிவால்போல்
நானும் பிடித்தேன் கவிவாலை!
காயும் கனியும் பறித்துண்டு
களிப்பில் கசப்பில் கலக்குண்டு
தேயும் வயதும் தெரியாமல்
திரையும் நரையும் புரியாமல்
ஓயும் உடலென் றுணராமல்
உழைக்கச் செய்வதும் இறையருளோ?

மரபுச் சிலுவை சுமந்தாலும்
மரண மனக்கவல் தொடவில்லை!
சிறகை உறவுகள் அறுத்தாலும்
செந்தமிழ்த் தாய்க்கை விடவில்லை!
பரவிச் சென்றன உணர்வலைகள்
பழியில் புகழில் சிலநிலைகள்!
திரவஞ் சிலநாள் திடஞ்சிலநாள்
திரிந்திட வைப்பதும் இறையருளோ?

எண்ணத் தறியில் நூலிழையில்
எத்தனை உடைகள் நெய்தாலும்
வண்ணப் பணமெனும் நிறப்பூச்சு
வாய்த்தால் வளர்வது புகழ்ப்பேச்சு
இன்னல் இழப்பும் எத்தனையோ,
இறைவன் தந்ததென் றெண்ணாமல்
என்னால் வந்ததே எனநினைக்கும்
இயல்பைக் கொடுத்ததும் இறையருளோ?

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 13 டிசம்பர், 2008

சீதைபோல் ஆகுந் தமிழ்!

அக்கதைச் சொன்ன தைப்போல்
அரக்கர்கோன் அவளைத் தூக்கி
மிக்கவான் வெளியே செல்ல
மீள்வகை அறியாச் சீதை
அக்கணம் ஆடை எல்லாம்
அணங்கவள் வீசி னாளாம்!
திக்கறிந் தவளை மீட்கத்
திருமகன் வருகைக் காக!

கற்பனை மலைமே லேறிக்
காட்டிய கற்புக் காட்சி
அற்புதம் என்பார் கொஞ்சம்
ஆய்ந்தறிந் தெண்ணிப் பார்க்க!
நற்றமிழ்ச் செஞ்சொல் லாடை
நாமவிழ்த் தெறிந்தா லந்தக்
குற்றமும் சீதை செய்த
குற்றமென் றாகு மன்றோ?

நாளெலாம் தமிழ்ச்சொல் நீக்கி
நாடகம் கவிதை காதை
ஆளலாம் பிறச்சொல் லென்றால்
அழிவதெம் தமிழ்தா னன்றோ?
மீளலாம் பிறசொற் சேர்த்து
மிளிரலாம் என்பார்க் கொன்று
ஏலலாம் எளிமை மற்றோர்
இரவலை நீக்கிப் போக்கி

தனித்தியங் கிடுமோர் ஆற்றல்
தாங்கினாள்! பல்லாய் வாளர்
கனித்தமிழ் மூத்த தென்றுங்
கழறினார்! கண்டம் ஏழில்
இனித்தசெந் தமிழ்ச்சொல் எங்கும்
இருக்குதென் றியம்பி னார்கள்!
அணித்தமிழ் அறிவைக் கொஞ்சம்
அறிந்தபின் எழுத லாமே!

வரம்பிலாப் புளுகைக் கொட்டி
வடித்தவால் மீகிப் பாட்டில்
அறம்பல அடுக்கிச் சொல்லி
அருந்தமிழ்ப் பண்பை நாட்டித்
திறம்பல வுடைய கம்பன்
தீட்டிய தேன்சொற் பாப்போல்
உரம்பல இட்டுத் தூய
ஒளிர்தமிழ் உயர்வைக் காப்போம்!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 10 டிசம்பர், 2008

அதிகம்!

நாத்திகனாய் இருந்ததனால்
நானிழந்தத் தமிழதிகம்!
நாத்திகனாய் இருந்ததனால்
நானறிந்த அறிவதிகம்!
நாத்திறத்தார் சொல்,எழுத்தால்
நடைமயங்கி நானெடுத்த
பாத்திறத்தை அறியாமல்
பா,திறம்போ னதேயதிகம்!

காதலெனுந் தேனுணர்வில்
கடமைமறந் தேனதிகம்!
சேதமிடும் விலங்குணர்வில்
சேர்ந்திருந்த நாளதிகம்!
பேதைகளைப் பேரறிவுப்
பேழையென்ற நினைப்பதிகம்!
ஏகமிலாப் பொதுவுணர்வில்
இருந்ததுதான் மிகஅதிகம்!

எல்லார்க்கும் நன்மைசெய்ய
எண்ணுகின்ற குணமதிகம்!
நல்லராய் நினைத்ததனால்
நானிழந்த பணமதிகம்!
புள்ளார்க்கும் மனக்காவாய்
பூத்திருக்கும் கவியதிகம்!
கள்வடிக்கும் செந்தமிழைக்
காப்பதிலென் உணர்வதிகம்!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 20 ஆகஸ்ட், 2008

பொய்யடா பொய்யடா பொய்!

ஆணவக் காற்றை அடைத்துக் கிடப்பதனால்
நாணச் சுரப்பி நரம்பறுப்பால் -வான(ம்)வரை
உய்யடா என்றே உதைத்தாலும் பந்தனையர்
பொய்யடா பொய்யடா பொய்!

ஓட்டைக் குடநீர் ஒழுகிக் குறையவில்லை
ஏட்டில் எழுத்தாய் இருப்பதுபோல் -காட்டித்தன்
மெய்யை நிலைநாட்டி மெய்யை அழிக்குமுயிர்
பொய்யடா பொய்யடா பொய்!

அச்சம் அருள்நன்றி ஆக்கிய ஆண்டவனை
மெச்சிப் புனைகதையால் மேம்படுத்தி -உச்சவரைப்
பொய்ச்சேர வைத்த புலமை அனைத்துமிங்கே
பொய்யடா பொய்யடா பொய்!

கண்ணாடி வேலியிட்டுக் காத்தாலும் நெய்விளக்கம்
உண்ணாடிக் காற்றின்றி ஓய்ந்துவிடும் -மின்னோடி
வெய்யனொளிப் பாய்ச்சும் விளக்கில் வளிப்புகுந்தால்
பொய்யடா பொய்யடா பொய்!

தேடிப் பொருள்சேர்த்துத் தேவைஎல் லாந்தீர்த்துக்
கூடிக் களிக்கும் குடும்பநிலை -வாடிக்கை
நெய்யற்றால் மாயும் விளக்கும் உறவுகளும்
பொய்யடா பொய்யடா பொய்!

தன்மானம் போற்றித் தமிழ்மானம் விட்டுயர்தல்
பொன்வானைச் சேர்புள்ளின் பொய்த்தோற்றம் -நன்மானம்
தெய்வத் தமிழ்க்காப்பே தேடும் பிறவனைத்தும்
பொய்யடா பொய்யடா பொய்!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 16 ஆகஸ்ட், 2008

மெய்யடா மெய்யடா மெய்!

தங்கத் தமிழ்திருடித் தம்மொழிபோல் மாற்றியதும்
பொங்கல்புத் தாண்டழிக்கும் பொய்யுரையால் -தங்கருத்தை
மெய்யாக்கி னாரென்ற மெய்யறிஞர் வாணரின்*சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

பன்றியுடன் சேர்ந்த பசுவின் கதையாகிக்
குன்றிக் குலமழிக்கும் கோடறியாய் -இன்றும்நாம்
தெய்வத் திருப்பெயரால் தேட்டம் இழப்பதெல்லாம்
மெய்யடா மெய்யடா மெய்!

ஒன்றே குலமென்(று) உயர்ந்த மரபணுவில்
நன்றே புரிவதுபோல் நஞ்சேற்றி -இன்றுவரை
உய்வாரை நீங்க உரைத்தத் திருக்குறளே
மெய்யடா மெய்யடா மெய்!

கண்டாலும் கேட்டாலும் கள்ளுண்ட போதைத்தரும்
பெண்டிற் பெருஞ்சிறப்பே பேரின்பம் -என்றிருக்கும்
மெய்யைப் புறமொதுக்கி மெய்யறிவுப் பெற்றவர்சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

தற்புகழ்ச்சிப் பேசித் தருக்கித் திரிவார்முன்
பொற்புகழ்ச்சிச் சொன்னால் புரிந்திடுமா? -நற்புகழைச்
செய்யடா செய்கவெனச் செப்புவதால் தீங்குவரல்
மெய்யடா மெய்யடா மெய்!

வாணர்* -தேவநேயப் பாவாணர்

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

இட்டவடி நோவும் இவர்க்கு!

கையளவில் தைத்தவுடை; கற்பறையின் வாய்மூட
நெய்யளந்த வாழை நெடுந்தூணால் -பையநலங்
கெட்டால் துடிக்காத கீழ்மை மகளி(ர்)மனை
இட்டவடி நோவும் இவர்க்கு!

பட்டஅடி நூறு படப்போவ தைநூறு
சுட்டவடுக் கண்டால் சுடுநெருப்பின் -பட்டறிவு
விட்டு விடாதென்றும் வெல்லறிவார் முன்வஞ்சம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

நாணத்தோ டிட்ட நறுந்தா மரையடியும்
மானத்தைப் போற்றும் மரபடியும் -தேனொத்துத்
திட்டமிடத் தெரிந்த திருமக்கள் மேல்துன்பம்
இட்டவடி நோவும் இவர்க்கு!

அன்பே!என் ஆருயிரே! ஆற்றல் மிகுந்தோழா!
முன்பேநம் மொழிந்ததையே -பின்பொருவன்
தட்டேந்தச் சொல்லித் தருவான் அதையுண்பான்
இட்டவடி நோவும் இவர்க்கு!

உள்ளதைக் கொண்டுண் டொழுங்குடன் வாழாமல்
அல்லதைத் தேடி அலைவார்!கால் -முள்ளாகிப்
பட்டவிட மெல்லாம் பழுதாகும் அக்கயவர்
இட்டவடி நோவும் இவர்க்கு!

முயலுக்குக் கால்மூன்று முட்டாளுக் கேழறிவு
கயலுக்குக் கால்தேடிக் காட்டுவார்! -செயலூக்கிச்
சுட்டெடுக்குஞ் சூதர் சுருட்டுப் புகைவிடுவார்
இட்டவடி நோவும் இவர்க்கு!

பாத்தென்றல்.முருகடியான்.

புதன், 30 ஜூலை, 2008

உழவின்றி உய்யா துலகு!

வணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த
அணுவின் துணையாலு மாகும் -கணைகள்
எழுகின்ற காலம் இதுவென்ற போதும்
உழவின்றி உய்யா துலகு!

குண்டுகளால் மக்கள் குருதிக் குளம்நீந்தும்
மண்டுகளால் வையம் மகிழ்ந்திடுமா? -என்றும்
மழையின்றிப் புல்லும் மலரா ததைப்போல்
உழவின்றி உய்யா துலகு!

பாம்பைப் பிடித்துப் படராலங் கொம்பேறித்
தேம்பித்தன் வால்பார்த்துத் தேர்வின்றிக் -கூம்பி
விழும்வாலி போன்று விளையும் அறிவியலும்
உழவின்றி உய்யா துலகு!

பனித்தேர் செதுக்கிப் பகல்முன் இழுப்பார்
அணித்தேர்த் தமிழை அழிப்பார் -கணித்த
முழவின்றி ஓசை முறையின்றிப் பாட்டுய்யா
துழவின்றி உய்யா துலகு!

படைக்கலன் செய்வார் பனிநிலாச் செய்வார்
உடைகலன் கப்பலுடன் ஊர்தி -படைப்பார்
பழுதின்றி எந்தப் பணிசெய்த யார்க்கும்
உழவின்றி உய்யா துலகு!

உலகப் பெருந்தேர் உருள உதவி
விலக்க முடியாத வேராய் -கலகக்
குழுவும் உணவுண்ணக் கைகாட்டும் அச்சாம்
உழவின்றி உய்யா துலகு!

பாத்தென்றல் முருகடியான்.

புதன், 23 ஜூலை, 2008

அணுவாற்றல் வேண்டும் அறி!

பலகல் நிலத்தைப் பறித்தாரே சீனர்;
சிலகல்லை மீட்டுச் சிரிக்க! -உலகில்
இனிநம்மைக் காக்க இறையாண்மைப் பூக்க
அணுவாற்றல் வேண்டும் அறி!

இருளில் கிடந்திழியும் இந்திய மண்ணின்
பொருளைப் பெருக்கிப் புதுக்கும் -அருளைப்
பணிவுந் தருமெனினும் பாரார் மதிக்க
அணுவாற்றல் வேண்டும் அறி

வல்லரசை வாழ்த்தும் வழக்கம் வளர்வதனால்
நல்லரசை ஏய்க்கும் நடைமுறையால் -உள்ளார்
அணுவாளக் கற்றவரென் றாவதனால் யார்க்கும்
அணுவாற்றல் வேண்டும் அறி!

அடிமை விலங்கை அணியாகச் சூடும்
மடிமை மடிதூங்கும் மக்கள் -விடிய
உணர்வாற்றல் ஓங்க உலகச் சமத்திற்(கு)
அணுவாற்றல் வேண்டும் அறி!

கல்லாதான் சொல்லும் கவியைச் சிலரவையில்
இல்லாப் பொருளேற்றும் இன்னுரையால் -பொல்லா
நிணச்செருக் குற்று நெறிமறப்பா ருய்ய
அணுவாற்றல் வேண்டும் அறி!

புதுமைப் புதுமையெனப் போக்கற் றிருள்வான்
பொதுமையைப் பூசிப் புரள்வார் -எதுமெய்?
கணித்தறியும் ஆற்றல் கலைவிளக் கேற்ற
அணுவாற்றல் வேண்டும் அறி!

பாத்தென்றல் முருகடியான்