புதன், 23 செப்டம்பர், 2009

சிவம்!

அன்பு சிவம்!
அறிவு சிவம்!
ஆண்டவனும் சிவம்!
நம்பி நம்பி
வணங்கி வந்தால்
நம்மைக் காக்கும் சிவம்!
நல்ல சிவம்!
வெல்ல சிவம்!
உள்ள தெய்வம் சிவம்!
சொல்லிச் சொல்லி
வணங்கி வந்தால்
காக்கும் சதாசிவம்!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

சக்தி!

ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்!
நாம் சக்தி
நாம் சக்தி
நாம் சக்தி நாம்!

அன்னை சக்தி
அன்பு சக்தி
அறிவு சக்தி ஆம்!
உன்னைக் காக்கும்
என்னைக் காக்கும்
உலகைக் காக்கும் ஆம்!

காளி சக்தி
மாரி சக்தி
கடவுள் சக்தி ஓம்!
கடலும் சக்தி
மலையும் சக்தி
மழையும் சக்தி ஓம்!

தாயும் சக்தி
தங்கை சக்தி
தருமம் சக்தி ஓம்!
நீயும் சக்தி
வணங்க வேண்டும்
சக்தி சக்தி ஓம்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 17 செப்டம்பர், 2009

முருகா!



முருகா! முருகா! முருகா!
மயிலில் வருவாய் முருகா!
மாம்பழம் தருவேன் முருகா!
மலர்களைத் தருவேன் முருகா!
பால்கொண்டு படைப்பேன் முருகா!
வேல்கொண்டு வருவாய் முருகா!
சேவல் கொடியோய் முருகா!
காவல் புரிவாய் முருகா!
தெய்வம் நீயே முருகா!
தேவன் நீயே முருகா!
சக்தியின் மகனே முருகா!
பக்தியில் வருவாய் முருகா!

பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அகரம் அம்மா!


அம்மம்மா
காலையிலே
எழுந்தம்மா
ஆசைமுத்தம்
தருவாளே!
நம்மம்மா
இரவம்மா
நடந்துவிட்டால்
பகலம்மா!
ஈகாட்டிப்
பல்விளக்கு
நல்லம்மா!
உன்னம்மா
உனக்காகத்
தோசைசுட்டாள்!
ஊட்டிவிட்டாள்!
தலைசீவிப்
பின்னிவிட்டாள்!
ஐயம் வந்தால்
அப்பாவைக்
கேளம்மா!
ஒற்றுமையாய்க்
கொடி வணங்கிப்
பாடம்மா!
ஓடிப்பாடி
விளையாடி
ஆடம்மா!
ஔவை போல்
நம்பாட்டி
தேடிடுவாள்!
அம்மா அப்பா
தெய்வமெனக்
கூறிடுவாள்!

பாத்தென்றல் முருகடியான்

சனி, 12 செப்டம்பர், 2009

மாதங்கள்!

சித்திரை வந்தால் நெய்பூசு!
வைகாசி வந்தால் கைவீசு!

ஆனியில் ஆற்றினில் தோணிவிடு!
ஆடியில் நின்றுநீ பாடிவிடு!

ஆவணி மாதம் அத்தை வந்தாள்!
புரட்டாசி மாதம் திரும்பிச்சென்றாள்!

ஐப்பசி மாதம் காற்றடிக்கும்!
கார்த்திகை தீபம் ஒளிகொடுக்கும்!

மார்கழி மாதம் குளிரடிக்கும்!
தைதை நாட்டியம் கால்படிக்கும்!

மாசியில் ஊசியில் நூலைவிட்டாள்!
பங்குனி ஆண்டெனும் முட்டையிட்டாள்!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 10 செப்டம்பர், 2009

கிழமைகள்!

சூரியன் தானே
ஞாயிற்றுக் கிழமை!
சுற்றும் நிலவே
திங்கள் கிழமை!
தங்கை வாய்போல்
செவ்வாய்க் கிழமை!
தம்பி அறிவான்
புதன் கிழமை!
வெற்றி கொடுக்கும்
வியாழக் கிழமை!
வெள்ளி நிறமாம்
வெள்ளிக் கிழமை!
வாரத்தை முடிக்கும்
சனிக் கிழமை!
வரிசை படிப்பீர்
ஏழு கிழமை!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கால்!

குருவிக் கெல்லாம் ரெண்டுகால்!
குதிரைக் கெல்லாம் நான்குகால்!
மூன்று கால்கள் முக்காலி!
நான்கு கால்கள் நாற்காலி!
எட்டுக் கால்கள் பூச்சுகள்
எச்சில் வலைகள் பின்னுமாம்!
காலில்லாதப் பந்தினைக்
கண்ணன் உதைக்க உருளுமாம்!

பாத்தென்றல் முருகடியான்

புதன், 2 செப்டம்பர், 2009

எண்ணம்மா! எண்ணு!

அம்மா ஒண்ணு!
அப்பா ஒண்ணு!
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு!

அன்பாய்ப் பாடம்
சொல்லும் எங்கள்
ஆசான் வந்தார் மூணு!

அக்கா கண்ணு
அண்ணன் கண்ணு
ரெண்டும் ரெண்டும் நாலு!

ஆனை பூனை
மானைக் பார்த்தால்
வாலும் காலும் அஞ்சி!

ஆறும் ஓடும்
அணிலும் ஓடும்
அஞ்சும் ஒண்ணும் ஆறு!

வானுல் வந்த
வில்லில் தோன்றும்
வண்ணம் கண்டால் ஏழு!

தாத்தா பாட்டுப்
பாடும் போது
தட்டும் தட்டு எட்டு!

எட்டி எட்டி
நடந்த தம்பி
லட்டு தின்பான் ஒன்பது!

பஞ்சுக் கையில்
காலில் விரல்கள்
அஞ்சும் அஞ்சும் பத்து!

பாப்பா தம்பி
சிரிக்கும் போது
பல்லும் முத்து முத்து!

பாத்தென்றல் முருகடியான்

சனி, 29 ஆகஸ்ட், 2009

சூரியன்!

காலையில் வருவான் சூரியன்!
கடல்மேல் வருவான் சூரியன்!
மாலையில் மறைவான் சூரியன்!
மலையினில் மறைவான் சூரியன்!

கடலைச் சுடுவான் சூரியன்!
மழையைத் தருவான் சூரியன்!
நாளும் வருவான் சூரியன்!
நம்மைக் காப்பான் சூரியன்!

பாத்தென்றல் முருகடியான்

புதன், 26 ஆகஸ்ட், 2009

குருவி!

சின்னக் குருவி!
சிட்டுக் குருவி!
துள்ளிப் பறக்கும்!
நல்ல குருவி!

பச்சைக் குருவி!
பாடும் குருவி!
கீச்சுக் கீச்சென்று
கத்தும் குருவி!

மரத்தில் இருக்கும்
மஞ்சள் குருவி!
துரத்திப் பிடித்தால்
பறக்கும் குருவி!

வண்ணக் குருவி
வம்பு செய்யாது
தின்னக் கொடுத்தால்
தேடும் குருவி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

பூமலை!


பச்சைமலை பசுமலை!
பாட்டுப் பாடும் குயில்மலை!
கீச்சுக் கீச்சுக் குயில்கள்
கிளையில் தாவும் திருமலை!

தாமரைப்பூக் குளத்திலே
தவளை நீந்தும் பூமலை!
பூமரத்தின் அடியினில்
புல்நிறைந்த பூமலை!

பூக்கள் பூக்கும் பூமலை!
பொழுது போக்கும் பூமலை!
காக்கை கத்தும் பூமலை!
காண வேண்டும் பூமலை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

கைவீசு!


கைவீ சம்மா! கைவீசு!
கண்ணே! கனியே! கைவீசு!
கைவீ சம்மா! கைவீசு!
காலையில் எழுந்து கைவீசு!

பூவே! பூவே! கைவீசு!
பொய்சொல் லாதே! கைவீசு!
பொன்னே! மணியே! கைவீசு!
போட்டிப் போட்டுக் கைவீசு!

நடக்க நடக்க கைவீசு!
நாளும் நாளும் கைவீசு!
அடுக்கு விரலால் கைவீசு!
அன்பைக் காட்டிக் கைவீசு!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

கொடி பறக்குது!

ஆடி ஆடிப் பறக்குது!
அசைந்து அசைந்து பறக்குது!
கம்பத்திலே பறக்குது!
காற்றில் ஆடிப் பறக்குது!

நிலவைத் தூக்கிப் பறக்குது!
நீண்ட கொடியும் பறக்குது!
சிவப்பு வெள்ளை நிறத்திலே
சிங்கைக் கொடியும் பறக்குது!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எம். ஆர். டி!


பயணம் போகும் எம்.ஆர்.டி!
பாட்டி போகும் எம்.ஆர்.டி!
பாம்பைப் போலும் வளைந்தோடிப்
பறந்தே போகும் எம்.ஆர்.டி!

கம்பியில் ஓடும் எம்.ஆர்.டி!
கரண்டால் ஓடும் எம்.ஆர்.டி!
தம்பியும் நானும் அப்பாவும்
தம்பினிஸ் போகும் எம்.ஆர்.டி!

நீருள் ஓடும் எம்.ஆர்.டி!
நிலத்துள் ஓடும் எம்.ஆர்.டி!
சீறிப் போகும் எம்.ஆர்.டி!
சிங்கப் பூரின் எம்.ஆர்.டி!

குப்பைப் போடக் கூடாது
கோபம் கொள்ளும் எம்.ஆர்.டி!
அப்பா கையைப் பிடித்தால்தான்
அழகாய்ப் போகும் எம்.ஆர்.டி!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

ஆனை!


ஆனை யைப்பார் ஆனை!
அம்மா! பெரிய யானை!
கன்னங் கரிய யானை!
கால்கள் பெருத்த யானை!

கொம்பு முளைத்த யானை!
கோவிலில் நிற்கும் யானை!
விலங்குத் தோட்ட யானை!
வித்தைக் காட்டும் யானை!

கரும்பு கேட்கும் யானை!
காது பெருத்த யானை!
தும்பிக் கையால் நம்மைத்
தொட்டுப் பார்க்கும் யானை!

பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

மணி ஓசை!

டிங்டாங் டிங்டாங் மணியோசை!
டிங்டாங் டிங்டாங் மணியோசை!
‘ச்சிங்சோங்’ வீட்டு மணியோசை!
‘செந்தில்’ வீட்டு மணியோசை!

கிணிகிணி கிணிகிணி மணியோசை!
கடிகாரம் ஒலிக்கும் மணியோசை!
திருடரைப் பிடிக்கும் மணியோசை!
தீயை அணைக்கும் மணியோசை!

கோயிலில் கேட்கும் மணியோசை!
குமரன் சிரிப்பது மணியோசை!
காலையில் எழுப்பும் மணியோசை
கடவுள் ஓசை மணியோசை!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பிள்ளைப் பூக்கள்!

பூக்கள் நீங்கள் பிள்ளைகள்!
புன்னகை நிலவின் வில்லைகள்!
காக்கும் விடியல் காலைகள்!
கலைப்பைப் போக்கும் சோலைகள்!

(பூக்கள்…)

அன்பு சுரக்கும் நீரூற்று!
அணைத்துத் தவழும் இளங்காற்று!
இன்பம் விளைக்கும் புதுப்பாட்டு!
இறைவன் பாடும் தாலாட்டு!

(பூக்கள்…)

தத்தி நடக்கும் தாமரை!
தத்துவம் சொல்லும் பொதுமறை!
சத்தியம் பூக்கும் செடிகளே!
சந்தனக் குங்குமப் பொடிகளே!

(பூக்கள்…)

சிறகு முளைக்கும் கிளிகளே!
சிங்கைத் தாயின் விழிகளே!
உறவைப் பாடும் குயில்களே!
ஓடி ஆடும் மயில்களே!

(பூக்கள்…)
பாத்தென்றல் முருகடியான்

புதன், 29 ஜூலை, 2009

நாட்டை நாடு!

ஒன்றே நாடு!
ஒன்றே மக்கள்!
ஒன்றே சிங்கப்பூர்!
என்றே பாடு!
என்றும் பாடு!
இனிக்கும் சிங்கப்பூர்!

(ஒன்றே…)

புகைத்தால் உனக்குக் கேடுவரும்!
பொய்சொன் னாலும் கேடுவரும்!
பகைத்தால் நமக்குள் கேடுவரும்!
பண்பும் பணிவும் வெற்றிதரும்!

(ஒன்றே…)

காலையில் எழுந்து குளித்துவிடு!
கடமையை உயிராய் மதித்துவிடு!
சோலையில் நடந்து பயிற்சியெடு!
சொன்னதைச் செய்ய முயற்சியெடு!

(ஒன்றே…)
பாத்தென்றல் முருகடியான்

சனி, 25 ஜூலை, 2009

அமைச்சராகலாம்!

கண்ணே! கண்ணே!
கண்ணின் மணியே!
பொன்னே! பொன்னே!
பொன்னின் ஒளியே!
உன்னை நம்பி
நாடும் இருக்குதிங்கே!

(கண்ணே…)

நாளைக்கு நீயொரு
மந்திரி ஆவாய்!
நல்ல மருத்துவம்
செய்திடப் போவாய்!
வேளைக்குக் கல்வி
கற்றிடு தம்பி!
வெற்றி உனக்கே
நிச்சயம் நம்பி!

(கண்ணே…)
பாத்தென்றல் முருகடியான்

செவ்வாய், 21 ஜூலை, 2009

அம்மா சொல்கேள்!

அம்மா சொல்கேள் அன்போடு!
ஆசான் சொல்கேள் அறிவோடு!
சும்மா இருந்தால் புகழேது?
சோம்பல் நீக்கி நலம்தேடு!

(அம்மா…)

கதிரவன் வருமுன் எழுந்துவிடு!
கருத்துடன் பாடம் படித்துவிடு!
புதுப்புதுக் கலையில் பயிற்சியெடு!
பொய்மொழி விலக்கிப் பணிந்துவிடு!

(அம்மா…)
பாத்தென்றல் முருகடியான்

சனி, 18 ஜூலை, 2009

பணிவு!

ஓடி ஆடிப் பாடு!
உடலுக் குறுதி தேடு!
கூடி வாழப் பழகு!
கொண்டு போற்றும் உலகு!

(ஓடி…)

கல்வி தானே கண்கள்!
கற்க வேண்டும் நீங்கள்!
நன்மை செய்யும் துணிவும்
நாளும் வேண்டும் பணிவும்!

(ஓடி…)

உண்மை பேசும் மனமும்
ஒழுக்கம் காக்கும் குணமும்
அன்னை தந்தை சொல்லும்
அன்பும் உலகை வெல்லும்!

(ஓடி…)
பாத்தென்றல் முருகடியான்

புதன், 15 ஜூலை, 2009

அன்பைப் போற்று!

பள்ளிப் போகலாம்
பள்ளிப் போகலாம்
பாடும் பறவைகளே!
அள்ளி உண்ணலாம்
அள்ளி உண்ணலாம்
அமுதம் கல்விகளே!

(பள்ளி…)

பேசும் கிளிகளே!
பிள்ளை மலர்களே!
பெற்றோர் தெய்வங்களே!
வீசும் தென்றலே!
வீணை ஒலிகளே!
அன்பைப் போற்றுங்களே!

(பள்ளி…)
பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 12 ஜூலை, 2009

கடவுள் ஒன்று!

கடவுள் ஒன்று
கருணை ஒன்று
மனிதர் ஒன்று

கற்க வேண்டும்
நல்ல பண்பைக்
கோயில் சென்று

(கடவுள்…)

உடலைப் பேண
ஓடி ஆட
சோலை உண்டு

உண்மை ஒழுக்கம்
உதவி செய்தல்
உயர்ந்த தொண்டு!

பாத்தென்றல் முருகடியான்

வெள்ளி, 10 ஜூலை, 2009

குழந்தை!


நொச்சிக் கொழுந்து காலாட்டி
நூறு தாமரை முகங்காட்டி
உச்சி முகர்ந்தும் உவந்தேற்றி
உலகம் வணங்கும் உயர்தெய்வம்!

மணிவா சகத்தை வென்றெடுக்கும்
மழலை வாசகம் தேனளிக்கும்
கனிவாய்க் கன்னியர் முத்தமதை
கடைவாய்ச் சொல்லால் தோற்கடிக்கும்!

மற்போர் வீரர் மன்னவரின்
மார்பில் உதைக்கும் மாவீரன்!
சொற்போர் நிகழ்த்தி வெல்வாரும்
சுருள்வார் குழந்தை வாய்மொழிக்கே!

தத்தி நடப்பதில் ஓரின்பம்
தத்தை மொழிமற் றோரின்பம்
பொத்தி அணைத்திடப் புத்தின்பம்
புன்னகை தரும்பொன் னுலகின்பம்!

மலரும் பூக்கள் வாடிவிடும்
மண்தொட மழைநீர் தூய்மைக்கெடும்!
புலரும் பொழுதில் நிலம்போலுன்
பூவுடல் வாடா ஆடகப்பொன்!

தாத்தா தாத்தா என்றென்னைத்
தாவிடும் போதில் நானுன்னைப்
பார்த்தால் பரம்பொருள் தெரிகிறதே!
பாவச் சுமைகள் குறைகிறதே!

முதுமைக் கால நோய்நீக்கும்
மூலிகைத் தென்றல் உன்வரவே!
இதுவரைக் கவிஞர் எழுதாத
இறைவனின் கவிதை குழந்தைகளே!

பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 5 ஜூலை, 2009

குருதிக் கொடை!


அட்டைகள் மாந்தருக்கு
அர்த்தமீந் திடுமாம் ஞானப்
பெட்டைகள் தமிழைத் தாங்கித்
தண்ணொளி தருமாம் நாற்றக்
குட்டைகள் உணவாய் மாறி
உணவளித் திடுமாம் கோழி
முட்டைகள் தமிழம் மிக்கு
முத்துகள் தருமாம் கேண்மின்!

கோட்டைகள் இடிந்து போச்சாம்!
கோவேறிக் கழுதை மரபுச்
சாட்டையை வீசிச் சோழர்
சரித்திரம் படைக்க எண்ணிப்
பாட்டையை மாற்றிப் பாசப்
பலனளித் திடுமாம் செய்தக்
கேட்டைநாம் மறக்கக் கம்பன்
கேண்மையாம் வைர மாச்சாம்!

இடையிலே மானம் விற்று
இடையிலே அறிவுங் கெட்டு
இடையிலே பொருளும் பெற்று
இடையிலே தேர்தல் வந்தால்
இடையிலே கம்பன் மேலாம்!
இடையினம் தமிழின் வேலாம்!
இடையிலே தமிழைச் சாய்த்த
இடருரைக் கோளைக் கேண்மின்!

மரபென்ற வானைத் தாங்க
மண்புழுப் படமா? அவர்போல்
கரவென்ற கரிசல் காடா
காத்திடுங் கழநி? பாட்டைப்
பரமென்றப் படிஏ றாதப்
பாவிகள் வரவால் நம்மை
அறமென்ற அருளைக் காட்டி
ஆண்டிடு வாராம் கேண்மின்!

ஞானத்தை விற்றல் மேன்மை
மானத்தை விற்றல் கீழ்மை!
ஈனத்தால் பொருளைச் சேர்க்க
எண்ணுவார்க் கில்லைத் தூய்மை!
வானத்தைப் போலி ருந்த
வண்டமிழ்க் கண்ண தாசர்
கானத்தைக் காதால் கேட்டுக்
கதிபெறு! அதுவே வாய்மை!

பன்றிகள் குட்டிப் போடக்
பரிந்துரைத் தவனே! முhனக்
குன்றுகள் சரிந்து வீழக்
குண்டுவைத் தவனே! வாழ்வில்
வென்றிகொண் டதுபோல் எண்ணி
வீரியம் தமிழுக் கீய
இன்றுநீ இரத்தம் தந்தால்
இன்தமிழ் மன்னிப் பாளா?


பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 29 ஜூன், 2009

சொல் தலைவா சொல்!


தாயும் நீ! துந்தை நீ!
தமிழும் நீ! சவையும் நீ!
பாயும் நீ! துயிலும் நீ!
பகுத்தறிவும் அறிவும் நீ!
ஓயும்நா ளில்லாமல்
உழைக்குஞ்செங் கதிரும் நீ!
நீயேயெம் உயிரென்று
நினைத்திருந்தோம் சிலர்சொல்போல்
பாயும்நந் தமிழ்ப்புலிக்குப்
பகையாநீ! சோல்தலைவா!

வெற்றியுடன் தோல்வியுற்றால்
விழிநீராய் விழுபவன்நீ!
பற்றவரும் பகைமுகத்தைப்
பார்த்தமனத் தெழுபவன்நீ!
கற்றடங்கி நின்றவரின்
கலைமனத்தை உழுபவன்நீ
நற்றமிழ்த்தாய் நலன்காக்க
நலிந்தவர்கால் தொழுபவன்நீ!
இற்றைநிலை இதுதானா?
என்பதுதான் கேள்வியினி!


பாத்தென்றல் முருகடியான்

வியாழன், 25 ஜூன், 2009

கூற்றலைக் கொடுமை!

சங்கம் பொறுக்கிய கடற்கரை எங்கும்
அங்கம் பொறுக்கிடும் அரக்கக் கொடுமை!
சிப்பிகள் பொறுக்கிய நெய்தற் கரையில்
உப்பிய உடல்கள் சிப்பிக ளாச்சே!
உப்புக் கண்டம் மீனவர் போட்டார்
உப்பியப் பிண்டம் கடல்தாய் போட்டாள்
முத்துக் குளிக்க மூழ்கிய கடலில்
செத்தவர் வாயில் சிதறிய பற்கள்
குன்றும் முள்ளும் குவளை மலரும்
மண்டி இருந்த மணற்பரப் பெல்லாம்
பெண்டு பிள்ளை பிஞ்சும் பூவும்
நண்டுகள் ஓடாய் நைந்து கிடந்தன
நீரலை ஏறி நீந்திய மாந்தரைப்
பேரலை ஏறிப் பிணமாக் கியதே!
அடிதாங் காமல் அலறிய ஆழி
படிதாண் டியதால் பட்டது வையம்!
ஈரக் கடலில் இத்தனை நெருப்பா?
கூரை பிடுங்கிடும் எருமைப் பிறப்பா?
வெள்ளிச் சிரிப்பால் விழுங்கிய கடலால்
வெள்ளுடை ப+ண்டன தமிழச்சி உடல்கள்
தாயை இழந்த தளிர்களின் ஓலம்
சேயை இழந்த தாயழுங் காலம்
தந்தது எதுவோ? தலைவரும் யாரோ?
இந்த நிலைக்கு எவனோ? சிவனோ?ட
ஏசு பிறந்த மறுநா ளிந்தக்
காசு பிறக்கக் காரண மென்ன?
வாடிய பயிரால் வாடிய மாந்தன்
ஆடிய மண்ணில் ஆழியின் ஆட்டம்!
மழைகொடுப் பவளே மரணம் கொடுப்பதா?
பிழைபொறுப் பவளே பிழைகள் செய்வதா?
குமரியைக் குடித்த கொடிய வளே!நீ
அமரிட வந்தாய் அறமுனக் கில்லை!
ஏவிய தெதுவோ? ஏவரற மொழியோ?
பாவிநீ கடலே! பழிபுரிந் தாயே!
கிழித்தால் மீண்டும் ஆக்கிடு வாயா?
மழித்தால் முளைக்கும் மயிரா உயிர்கள்?
மொழித்தாய் தோன்றிய முதல்நி லத்தை
இழித்தாய் கடல்நீ! இயற்கையு மில்லை!
கட்டு மரங்கள் மிதப்பதைப் போன்று
கட்டுடல் மாந்தர் கட்டா மரங்களா?
நெஞ்சைக் கசக்கிப் பிழிந்த நிகழ்வு
துஞ்சிய மக்களைத் துடைத்தநீ ரிழிவு!
மீன்களை நாங்கள் உண்டதற் காக
மீன்களுக் கெம்மை இரையிட் டாயோ?
தண்மை இருந்தும் தாய்மன மில்லாப்
பெண்மை நீயெனப் பேசிட வைத்தாய்!
கண்மை தீட்டிடக் கணவாய்ப் பிடிப்போம்
வன்மைத் தமிழினம் வளரும்
உண்மை இதையிவ் வுலகம் உணருமே!


பாத்தென்றல்.முருகடியான்

சனி, 20 ஜூன், 2009

முடிச்சி!

காந்தக் கயிற்றில் தொங்கிடுங் கோள்கள்
ககனம் மிதந்திடும் கோள்களே!
கூந்தலை வளர்த்திடும் கோதையர் இடுவதும்
குடைபோல் வடைபோல் முடிச்சுகளே!

மூட்டுகள் எனும்பல முடிச்சிகள் போட்டதில்
ஊட்டினார் உயிர்வளி ஆண்டவனார்
பூட்டிய முடிச்சுகள் அவழ்ந்திட வலிவிழுந்து
போய்விடும் மாந்தரின் தாண்டவவேர்!

தனித்தனித் தாள்களை ஊசிநூ லிட்டதைக்
கோர்த்து முடிச்சிட நூலாகும்!
இனித்திடும் தமிழினில் தளையொரு முடிச்சென
இருந்திடத் தமிழ்க்கவி வேலாகும்!

ஆண்முடிச் சென்பது படிந்திடும் முடிச்சுகள்
பெண்முடிச் சென்பது படியாது!
வீண்முடிச் சென்பது மொட்டைத் தலையுடன்
முழங்கால் இணைவது முடியாது!

மாலை முடிச்சினை மலைப்பென் பாரெழில்
மலர்களைத் தொடுத்திடுந் தோரத்தால்
கூளைக் கனுப்பிடுஞ் சுருக்கெனும் முடிச்சினால்
சுருண்டன உயிர்பல காரணத்தால்!

இழையில் விழுந்திடும் முடிச்சினைப் பிரித்திடல்
எளிதென நினைப்பது தவறாகும்
பிழையெனும் முடிச்சுகள் வாழ்வுறும் மறந்திட
முடிந்தால் வாழ்விதே தவமாகும்!

பாட்டிகள் முந்தானை முடிச்சினில் இருந்தன
பணத்துடன் சாபமும் அக்காலம்
வேட்டிகள் சேலையில் முடிச்சதும் ஆண்களை
வீழ்த்திட நினைப்பதே இக்காலம்!

ஆயிர மாயிரம் கண்களைக் கொள்வது
அங்கயல் வலைபெறும் முடிச்சால்தான்
ஓய்வுறும் வரைவரும் மாந்தரின் வாழ்வினில்
உயர்வுகள் உறவேனும் முடிச்சால்தான்!

முடிச்சுகள் இல்லாத உடையோ போருளோ
மூதுல கெங்குமே கிடையாது
பிடிப்புடன் இருந்தஅத் தொப்பூழ்க் கொடியற
முடிச்சிட விலையெனில் உயிரேது?

தூண்டிலும் கயிறும் முடிச்சிடா திருந்தால்
வேண்டிய மீன்களைப் பெறுபவர்யார்?
ஆண்டியின் வயிறுறும் அரும்பசிக் குணவிடும்
முடிச்சறுந் தாலுயிர் தருபவர்யார்?

நாற்று முடிச்சுகள் வயல்களில் பிரித்திடச்
சோற்று முடிச்சுகள் உருவாகும்
காற்றை முடிச்சிடக் கற்றவர் சொற்களே
கடவுளைக் காட்டிடுந் திருவாகும்!

இஸ்த்திரி தமிழுடன் இணைத்திடும் முடிச்சினால்
எந்தமிழ்த் தீய்ந்தே கரியாச்சு
அத்திரி கருகம் முடிச்சறிந் தார்க்கே
அறிவின் கதிரொளி விரிவாச்சு!


பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 15 ஜூன், 2009

துன்பம் தேடும் தோகைகள்!

கச்சை அணியாத கனமுலைகள் காற்றாட
தச்சம் செதுக்காதத் தளிர்வாழைத் தொடையாட
அச்சம் மடம்நாணம் அத்தனையும் விட்டுலவிக்
கொச்சைப் படுத்துகின்ற குமரிகளே! கேளுங்கள்…

ஓடைப் புணல்நீந்தும் மீன்களுக்கும் செதிலிருக்கு
காடை புறாக்களுக்கும் கவசமாய்ச் சிறகிருக்கு
ஆடை அரைகுறையாய் ஆபாசத் திரையரங்காய்
பாடைப்பல் லாக்குநடை பயிற்சிபெறப் போவதேன்ன?

முனிவன் மயக்கமுற மோகவுடல் காட்டுகிறீர்
இனிமை விரும்புமந்த இளையர்மனம் வாட்டுகிறீர்
கனிகள் அசைத்தவர்க்கு காமவெறி ஊட்டுகிறீர்
மணிதற் பிழந்தொருநாள் மரணத்தேர் ஓட்டுகிறீர்!

முற்றும் வெளிக்காட்டி முதியோர்க்கும் தீமூட்டிச்
சற்றும் சலனமின்றிச் சாலைகளில் உலவுகிறீர்
கற்றும் அறிவிலையோ? காற்கால மானிடமோ?
கற்பும் உயிர்பறிக்கக் காரணமே நீங்களன்றோ!

கோடி விழிகளுங்கள் கோலத்தைக் கொத்தியபின்
தேடி மணமுடிக்கும் திருவாளர் கணவருக்கும்
ஊடிச் சுவைகொடுக்க உணர்ச்சியென்ன வைத்திருப்பீர்?
காடிப் பழங்கள்ளாய்க் கைத்துவிட்ட பாலாவீர்!

ஆங்கில மோகங்கொண்டு ஆசியா அழிதல்கண்டோம்
தீங்கிலாப் பண்பாடெல்லாம் தீயிலே கருகக்கண்டோம்
மாங்குயில் மயிலைப்போன்ற மகளிரின் குணங்கள்மாறி
ஓங்குதே காமச்சிந்தை உலையுதே நல்லோருள்ளம்!


பாத்தென்றல் முருகடியான்

புதன், 10 ஜூன், 2009

காடு!

கரும்பச்சை முண்டாசு கழுத்துவரை சன்யாசி
கரும்புகளும் பண்ணிசைக்கும் சொர்க்கபுரி சகவாசி!

காற்றுக்குத் தலையாட்டி காருருக்கும் எரியீட்டி
நோற்றுக்கொண் டேஉலகின் நோய்விலக்கும் வழிகாட்டி!

நரைவந்தால் கொட்டிவிடும் நல்லதலை உன்தலைதான்
புதைத்தாலும் பூமடியில் புதவைரம் உன்னுடல்தான்!

பச்சைநிறத் தலைமுடியில் பறவைகளைத் தூங்கவிட்டு
அச்சுறுத்தும் விலங்குகளை அடிமடியில் ஆடவிட்டு

நுச்சுக்காற்றைக் குடித்து நற்காற்றை வெளிப்படுத்தும்
ஆச்சுதனும் நீயல்லவா! அறம்பரப்புந் தாயல்லவா!

வெட்டியிவன் வீட்டுக்கே விறகாகிக் கதவாகி
பட்டமரப் பெயரோடு பால்கொடுக்கும் காமதேனே!

கடன்பட்டு வாழ்வதிலும் காடம்மா உன்னைப்போல்
உடன்கட்டை ஏறிவிட்டால் உன்மானம் எனக்கும்வரும்!

அவஞ்செய்தேன் அறிவிழந்தேன் ஆரண்ய ஆரணங்கே
தவஞ்செய்து நான்பிழைக்கத் தாயேநின் மடிதருக!


பாத்தென்றல் முருகடியான்

வெள்ளி, 5 ஜூன், 2009

விரலைக் குத்தி!

ஒருவிரலை ஊசிகொண்டு குத்து -வரும்
உதிரமாதல் கவியெழுதிக் கொத்து –மதப்
பெருவிரலை வெட்டியெடு
பேதமையைச் சுட்டுவிடு
கருவறைக்குள் புதுக்கருவைப் பாய்ச்சு –அந்தக்
காலத்தில்தான் அமைதிக்கதிர் வீச்சு!

மனிதனுக்காய் மதமிருந்தால் நன்மை –அந்த
மதத்துக்காய் மனிதனெனல் புன்மை –நாளும்
இனியதற்குச் சண்டையிட்டு
எரிவதிலும் சரிவதிலும்
இல்லையடா ஆறறிவின் மேன்மை –மதம்
ஏறியவர்க் கெங்கிருக்கோ ஆண்மை?

வன்செயலால் வளர்த்துவிட்ட எதுவும் -மறு
வன்செயலால் பின்னொருநாள் சிதையும் -நேற்று
அண்ணனெனத் தம்பியென
அறையிருந்து பிறந்தவர்கள்
மண்ணையள்ளிப் போட்டுக்கொள்ள மதமா? –அன்றி
மண்டையோட்டில் குண்டுபோடும் வதமா?

கால்வயிற்றை நிரப்பவில்லைச் சோறு –மதக்
காடுகளை வளர்ப்பதென்ன பேறு? -இதில்
மேல்வகுப்புக் கீழ்வகுப்பு
நூல்பகுப்புச் செய்ததனால்
பால்கிடைக்காப் பிள்ளைபல நூறு -இந்தப்
பாவத்துக்கு விதைகள்மதச் சேறு!

புத்தனுக்கே மார்பில்துளை போட்டான் -அந்தப்
போக்கிற்கு மதமெதற்குக் காட்டான் -குணம்
எத்தனைதான் நீதிநெறி
எடுத்துரைத்தப் போதுமந்த
இழிபிறவி திருந்திவர மாட்டான் -இவன்
எவ்விடத்தும் வெறிபிடித்தக் கோட்டான்!

மூடியில்லா விளக்கெடுத்து மூழ்கி –ஒளி
முத்தெடுக்க முடிந்திடுமோ கேள்வி –தினம்
தேடுவதும் ஓடுவதும்
தேவனருள் வேட்கையெனில்
பாடுவதேன் போர்ப்பரணிப் பாட்டு? –எந்தப்
பரம்விரும்பும் உயிரழிக்கும் வேட்டு?


பாத்தென்றல் முருகடியான்

சனி, 30 மே, 2009

விளக்குமரம்!

கண்ணீர்த் துளிகளில் நட்டமரம் -இது
காய்க்கா தெனக்கை விட்டமரம் -புயல்
காற்றில் வெயிலில் வேரறுந் திடாமல்
காவியம் படைத்திடும் ஆலமரம்! –சிங்கை
விடுதலை விளக்குமரம்! –தமிழ்
விருந்திடப் பழுத்தமரம்!

ஒவ்வோ ராண்டிலும் மின்னுகிறாள் -மன
உறுதியோ டுயர்வினை எண்ணுகிறாள் -வரும்
எவ்வர வாயினும் இனித்திடப் பிணைப்பதில்
இறைவன் திருநெறி நண்ணுகிறாள் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -நல
விருந்திடு வேலமரம்!

நன்றியைப் போற்றிடுந் தென்னைமரம் -பால்
நிறமலர் தூவிடும் புன்னைமரம் -புவி
எண்டிசை ஏற்றிடும் எழிலர சாட்சியில்
இந்திரக் கற்பக மானமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடும் வாழைமரம்!

பலவகைப் பறவைகள் வந்திறங்க –தன்
பசுந்தலை வீடெனத் தந்தமரம் -எது
நல்வினை தீவினை நவின்றிடும் நூலென
வெண்ணிறக் கோடிட் டறுத்தமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -பால்
வடித்திடும் நொய்வமரம்!

செம்மீன் விழுங்கிய சிறுமீன்கள் -துயர்
செய்தி அறிந்ததிக் கட்டுமரம் -பகை
எம்மீன் வடிவிலும் இங்குற நேர்ந்திடின்
இவளே கசந்திடும் எட்டிமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -அடி
வேரிலும் பழுக்கும்மரம்!

சந்தன மரம்போல் தேய்ந்திடுவாள் -கடற்
சங்கறுப் பாரையும் காய்ந்திடுவாள் -கொடுஞ்
சிந்தனை யாளரின் செயலறிந் தாலிவள்
பந்த மறுத்திடும் தூக்குமரம் -புகழ்
வளர்த்திடுஞ் சிலுவைமரம் -மதில்
வேலிக்குக் கிளுவைமரம்!

ஓங்கி வளர்வதில் பாக்குமரம் -மற
உறுதியில் உழைப்பதில் தேக்குமரம் -துயர்
தேங்கிய இதயத்தை தேவனின் காலிட்டுத்
திருத்திடக் கனிதரும் குரந்தைமரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

தூங்காத் துணிவினில் வேங்கைமரம் -தொழில்
துறையில் வளர்ச்சியில் வாகைமரம் -அறந்
தாங்கிய தத்துவ மொழிகளைத் தலைகளில்
தவழ்ந்திட அசைந்திடும் கொடியின்மரம் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

முதுகுத் தண்டெனும் மரமேறி –ஒளி
மூளைக்கு வந்தபின் கொடிஏற்றம் -பொது
விதிகளை மீறுதல் வெம்மொழி கூறுதல்
வேண்டாம் விளக்கற இருள்வாட்டும் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்குமரம்!

கனியுடன் நிழல்தரும் மரங்களைப்பார் –புகைக்
காற்றுடன் அமிலத்தை மாற்றுவதார்? –தவ
முனியென வானிடம் மiழைவரங் கேட்பதை
மனிதா உன்மனம் எண்ணிடத்தான் -சிங்கை
விடுதலை விளக்குமரம் -தமிழ்
விருந்திடப் பழுக்கும்மரம்!


பாத்தென்றல் முருகடியான்

ஞாயிறு, 24 மே, 2009

தமிழா! தமிழில் பேசு!

அச்சன் படைத்த அருந்தமிழ்த்தேன்
அள்ளி அருந்த முடியாமல்
எச்சம் விரும்பும் இழிந்தவராய்
இன்னும் தமிழா! நீயிருந்தால்
மெச்சிடு வாரோ நம்மினத்தை?
மேன்மைத் தமிழ்த்தாய் நிலைப்பாளா?
உச்சித் திலக உணர்வடைய
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

உலகைக் கொஞ்சம் விழித்துப்பார்
உன்தாய்க் கிளை மொழியெல்லாம்
பலகலை பயிலும் நாளிந்தாள் பண்டே
உடையாள் தமிழ்ப்பெண்ணாள்
அலகிடச் செய்தாள் ஆயிமித்தாய்
ஆரியம் ஆங்கிலத் தார்தேய்த்தார்
இலகிட இந்நாள் இந்நிந்நாள்
எழுவாய் தமிழா தமிழ்பேசு!

பெருமைத் தமிழெனப் பேசாதே
பின்னதைக் குப்பையில் வீசாதே
அருமை இலக்கிய அறநூல்கள்
அழிந்திட நீதுணைப் போகாதே!
வறுமை வேலை இவையெண்ணி
வாய்ப்பிடும் பிறமொழி படித்திடுக!
எருமை எம்மினம் இல்லையென
எண்ணிடத் தமிழா தமிழ்பேசு!

கொச்சக் கவிப்பா போலிங்கே
கொச்சைப் படுத்தும் ஊடகங்கள்
நச்சைக் கலக்கும் நாளிதழ்கள்
நமக்கேன் என்பதை உணர்ந்திடுக
கச்சை அணியாக் காரிகைபோல்
கண்ணிய மிழக்கும் தமிழ்வேண்டாம்
துச்சம் தமிழ்ப்பகை என்றிடுக
துணிந்தே தாய்த்தமிழ் பேசிடுக!

செல்லிடப் பேசி என்றொருசொல்
செய்தளித் தாரொரு தமிழ்க்கவிஞர்
நல்லிடந் தேடும் தமிழுணர்வு
நமக்கிருந் தாலது இனவுணர்வு
வெல்லத் தமிழில் பிறமொழியை
விரும்பிச் சேர்த்தேன் எழுதுகிறாய்?
இல்லை என்பார் தமிழ்மானம்
இருந்தால் தமிழா தமிழ்பேசு!

அவரவர் தாய்மொழி வளர்க்கின்றார்
அடிமை நீதமிழ் கெடுக்கின்றாய்
சுவரை இடித்ததில் ஓவியமா?
சூதறி யாத்தமிழ்க் கேவலமா?
தவறைச் சுட்டினால் எதிர்க்காதே
தமிழ்வய லில்களை வளர்க்காதே
உவர்நீர் குடித்திட நினைக்காதே
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

தாய்ப்பால் ஊட்டிக் காத்தவளை
தரணியில் முதன்முதல் பூத்தவளை
வாய்ப்பால் தமிழென வாய்த்தவளை
வண்ணம் சிந்தெனக் காய்த்தவளை
சேய்ப்போல் அறநூல் சேர்த்தவளை
செம்மொழி எனும்புகழ் பார்த்தவளை
ஏய்ப்பா ருடன்நீ சேராமல்
இதழ்ச்சுவை சேரத் தமிழ்பேசு!

அறிவியல் ஆயிரங் கைகளுடன்
ஆல்போல் தழைத்திடும் வையமிது
கருவிகள் கலைகளைக் கண்டறிவாய்
கனித்தமிழ் வாழ்ந்திட தொண்டுசெய்வாய்
திருவருள் கொடுத்தத் தேன்தமிழில்
தேடிடு கிடைக்கும் புதுச்சொற்கள்
மறுவற முகவரி நீகாட்ட
தமிழா தமிழில் பேசிடுக!



பாத்தென்றல் முருகடியான்

சனி, 11 ஏப்ரல், 2009

மாணவ மணிகாள்!

விடுதலை வேண்டி
விட்டில்க ளாகி
விளக்கைத் தேடும் கள்ளிகளா?
சுடுதலைப் பற்றிச்
சொரணைஇல் லாமல்
சுடலைக்குப் போகுஞ் சுள்ளிகளா?

பிஞ்சினில் பழுக்க
பஞ்சென நரைக்க
நெஞ்சினைத் தூக்கி நடப்பவரா?
நஞ்சென மாறும்
நடையுடை தேடும்
அஞ்சுதற் கஞ்சா மடப்பதரா?

படிக்கும் நாளில்
குடிக்குங் கோளில்
பிடிக்கும் புகைக்கும் அடிமைகளா?
நொடிக்குள் மாறும்
நுண்ணறி வுலகில்
முடிக்குள் நாளொரு பொடிமைகளா?

நாணங் கொள்வது
நன்னெறி செல்வது
வானம் சேர்த்திடும் வாலறிவு!
ஊனம் பாரதி
உரைத்தா னென்பது
ஞானம் பெறாரின் நூலறிவு!

கசடறக் கற்று
கனியென முற்று
காலம் கண்முன் பொன்னாகும்!
இசைபட வாழ
இன்னலஞ் சூழ
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்!

பெற்றோர் சொல்லை
தட்டுதல் முள்ளில்
பட்டது போன்ற துயர்நேரும்!
குற்ற மிழைக்கும்
குண்டரின் குழுவைப்
பற்றுதல் தீராப் பழிசேரும்!

ஆயிரம் மணிகள்
ஆகில மிருந்தும்
வாயுரை மணிகள் மாணவரே!
பாயிரம் பெற்றோர்
பயிற்றிடும் ஆசான்
பயன்மொழி நடந்தால் தேனவரே!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 6 ஏப்ரல், 2009

வேண்டுகோல்!

அக்கினிக் குஞ்சுதான்
என்றிருக்காதே
அடர்கா டழிக்கும்
மறக்காதே!

எக்கனி பறிக்கலாம்
என்றறியாமல்
எட்டியைப் பறித்திட
எண்ணாதே!

பாலொடு நீரைக்
கலப்பதனால்,எப்
பழுதுறும் என்று
கேட்பார்கள்!

வாலறி வில்லாப்
பறவைஅதனை
வகைபிரித் துண்ணும்!
வழுவெண்ணும்!

தெரியா திருப்போர்
செய்பிழை பொறுப்போம்
தெரிந்தே செய்மனம்
எதையெண்ணும்?

நாளொரு சொல்லை
நாமிழக் கின்றோம்
நாடகம் ஊடகம்
தமிழில்லை!

நாலடி ஏறினால்
ஐந்தடி சறுக்கி
நலிவடை வோம்மொழி
எலும்புறுக்கி!

வகைவகைக் குருதி
வாழ்வதிவ் வுடலி
புகமுடி யாப்பிற
அணுப்பகுதி!

தொகைமிகுந் தமிழ்த்தேன்
தொட்டிலிற் பிறசொற்
புகப்புகப் போகும்
தமிழுயிரி!

வெற்றிலைப் பாக்கும்
சுண்ணமும் சேர்த்தால்
மற்றொரு நிறமாய்
மாறிவிடும்!

உற்றிதை நோக்கு
உன்றமிழ் மொழியும்
மற்றொரு கலப்பால்
வேருங்கெடும்!

அருகிப் போச்சு
அருந்தமிழ்ப் பெயர்கள்
அன்புடன் எண்ணிட
வேண்டுகிறேன்!

பெருகிப் போகும்
பிறசொல் நீக்கிப்
பேசிட எழுதிடத்
தூண்டுகிறேன்!

பாத்தென்றல்.முருகடியான்

செவ்வாய், 31 மார்ச், 2009

துமுக்கி தூக்குவோம்!

வட்டாரக் கூட்டம்; சாதி
வட்டார நாட்டம்; தமிழன்
ஒட்டாமலே பிரிந்துப் பிழைக்கும்
ஒட்டார வேட்டம்!

சென்னைத் தமிழனாம்; மதுரை
அன்னைத் தமிழனாம்; தஞ்சை
மன்னைத் தமிழனென்று பேசும்
மானத் தமிழனாம்!

தென்னவன் முதலா? பகைமைத்
திராவிடன் முதலா? இன்றும்
உண்ணி உறிஞ்சும் வடவர்
உலகத்திம் முதலா?

இல்லை என்பவன்; மறைவில்
இருக்கு தென்பவன்; அறிவும்
உள்ளதென்று பதவிதேடும்
உணர்வில் வல்லவன்!

மானம் உள்ளவன்; தமிழை
மலர வைப்பவன்; புகழை
ஈனவழியில் ஈட்டுமெவனும்
இழிந்த பிறப்பவன்!

மதத்தின் பெயரிலே; தமிழின்
மானம் அழிப்பவன்; வேற்றுப்
பதத்தை நம்பிப் பயணம்போகும்
பார்வைக் குறைந்தவன்!

கஜினி ஆளலாம்; நடிகன்
ரஜினி ஆளலாம்; நாளை
அசினும் ஆளமுல்லைப் பெரியாறு
ஆறும் போகலாம்!

தமிழைக் காப்பதாய்; சொல்லித்
தம்மைக் காக்கிறார்; நம்மை
உமியை உண்ணச் சொல்லிஅரியை
உறவுக் களிக்கிறார்!

குமரிக் கடலிலே; நம்மைக்
கொன்று குவிக்கிறான்; அவனைத்
தமரனென்று தில்லிக்காரன்
தயங்கி நிற்கிறான்!

துமுக்கி தூக்கணும்; இனியும்
தூதைத் தவிர்க்கணும்; வீணில்
கமுக்கம் பேசும்கட்சி கழகம்
கரிசை நீக்கணும்!

தமிழன் என்பவன்; செருப்பைத்
தலையில் தாங்குவான்; என்று
உமிழும் வாயில் எரியுந்தீயை
ஓங்கிச் செருகணும்!

பாத்தென்றல்.முருகடியான்

வியாழன், 26 மார்ச், 2009

தேசிய திருவிழா!

மான்பிடித் தேயிரை யாக்கிட ஓடிய
மாவரி மாநிலத்தை... -கடல்
மீன்பிடிப் பார்சிலர் மேவிய குடில்களும்
மின்மினிக் காநிலத்தை...

தேன்குடித் தாடிடத் தேன்மலர் சூடிடத்
திருத்திய தாருழைப்பு? –ஒளி
வான்கதிர் நிலவுடன் வையம்பு கழ்ந்திட
வைத்தது நம்பிழைப்பு!

காட்டுடன் மேட்டையும் கல்லுடன் முள்ளையும்
கடந்தன நம்கால்கள் -எழில்
வீட்டையும் பாட்டையும் வியர்வையி லெழுதி
விளைந்தன நம்தோள்கள்!

பசிக்கடி உள்ளுற கொசுக்கடி வெளியுற
பட்டது யாருடம்பு? -உயிர்
பொசுக்கிடு வாரிடம் பூவென நசுங்கிய
தமிழரென விளம்பு!

காற்பந் துதைப்பதைப் போலுதைத் தாரந்தக்
காலத்தை எண்ணுகிறேன்! -இன்று
நாற்பத் திரண்டக வைப்புத் தமுதத்தை
நானள்ளி உண்ணுகிறேன்!

வையகம் கையக மாக்கிவிட் டோமிந்த
வாழ்;வை உயர்த்திவிட்டோம்! -பெரும்
பொய்யகத் தாரையும் தூக்கிவிட் டோம்வளம்
பூத்திட ஆணையிட்டோம்!

கண்ணீர்த்; துளிகளை வைரங்க ளாக்கிடக்
கையிரு நான்குபெற்றோம்! -நம்மேல்
வெந்நீரை யூற்றிய வீணர் விழிபெற
வீரப் படையும்பெற்றோம்!

வானிலோர் தண்ணிலா வையத்தி லின்;நிலா
தானவள் சிங்கையம்மா! -மக்கள்
ஊனிலு முயிரிலும் மொன்றிக் கிடந்திடும்
உண்மையே சிங்கையம்மா!

எப்படி வந்ததிப் படியொரு வளமெனத்
தப்படிப் பார்நினைக்க... -உழைப்
பைப்படி யாகவே எண்ணி நடந்தவர்
உயர்வென உலகுரைக்க...

முப்படி ஒருபடி சமய வெறிப்படி
முனைமழுங் கும்படியாம்! -இனத்
தப்படி வேற்றுமை சட்டம் சமத்துவ
சார்ந்த முறைப்படியாம்!

தூசித் துகள்களைத் தட்டித் துலக்கிய
தூய திருநிலத்தை -எழில்
வீசுங் கொடியசைந் தாடுந் திருவிழா
தேசிய நாள்விழாவே!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 21 மார்ச், 2009

தித்திக்கும் தேசியநாள்!

உலகப் படத்தில் ஒளிரும் புள்ளி!
உறுபசிப் பிணியை எரிக்கும் கொள்ளி!
புலமைப் புதுமைப் புலர்விடி வெள்ளி!
புகழ்பெற நலங்கள் தருவாள் அள்ளி!
சலனமில் லாநற் சமத்துவப் பள்ளி!
சட்டம் ஒழுங்கால் வலிவருள் நெல்லி!
வளந்தருஞ் சாங்கி துறைமுகச் செல்வி!
வணங்கிடு வோமவள் திருப்புகழ் சொல்லி!

கண்ணீர் வடித்தவள் அன்றொரு நாளால்
கட்டறுத் தெழுந்தவள் விடுதலை வாளால்
பன்னீர் தெளித்தவள் நன்னெறிக் கோளால்
பழிகளைத் துடைத்தவள் நான்கிரு தோளால்
புண்ணீர் அகற்றினாள் மதிஎனும் வேலால்
புதுநெறி அறிநெறி வகுத்தசெங் கோலாள்
திண்ணியக் கோணலை நிமிர்த்தினள் நூலால்
தென்கிழக் காசியத் தின்றிவள் மேலாள்!

ஆறுகள் ஏருழ அணிவயல் இல்லை
ஆயினும் இவளுடல் அருள்மணக் கொல்லை
வீறுகொள் கடலலை நாற்புற எல்லை
விலங்கியல் புள்ளியல் இன்பமோ கொள்ளை
சேறுகொள் நிலமிசை மனைவரும் ஒல்லை
சிறந்திடக் கண்டனர்ப் பனிமலைப் பிள்ளை
பேறுகொள் அவள்திருப் பெயரெனுஞ் சொல்லைப்
பேசினால் உள்ளொளி பிறக்குமா தொல்லை?

இன்றிவள் வயதொரு நாற்பதின் மூன்று
எழுந்தெடு நற்றுறை புகழ்ந்திடத் தோன்று
குன்றிவள் விளக்கெனக் குறள்வழி ஊன்று
குடிநலங் காப்பதில் இவள்பெருஞ் சான்று
நன்றுற நான்கின மதநிறந் தாண்டு
நாமெனும் நலம்வர இறைவனை வேண்டு
வென்றிட விடிவுற அறிவொளி தூண்டு
வெற்றியே விளைந்திட விளக்கிடும் ஆண்டு!

பாத்தென்றல் முருகடியான்.

திங்கள், 16 மார்ச், 2009

தமிழ்முழங்கக் கேட்போம்!

செம்மொழியாய் இருப்பதற்குத்
தகுதிபதி னொன்றாம்!
அம்மொழியும் தனித்தியங்கும்
ஆற்றலதில் ஒன்றாம்!
நம்மொழிக்கும் அத்தகுதி
நன்கமைந்த துண்டாம்!
இம்மொழிக்குள் இரவல்மொழி
கலப்பதுகற் கண்டா?

எளியதமிழ் என்பதென்ன?
இரவல்மொழிக் கலப்பா?
வலியதமிழ் ஏதுமில்லை
வழக்கமாகும் உழைப்பால்!
கிளிகளிங்கு பேசுமன்றோ
சொல்லுகின்ற சொல்லை!
தெளியவேண்டும் தமிழுலகம்
மலரழிக்கும் முள்ளை!

வானுயர்ந்த தோற்றமந்த
வாமனைப்போல் குறையும்...
தேனளிக்கும் மலர்க்காவும்
தீப்பொறியால் எரியும்...
ஊனமுற விட்டிடாமல்
ஒண்டமிழைக் காப்போம்!
ஆனவரை நம்குழந்தை
தமிழ்முழங்கக் கேட்போம்!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 11 மார்ச், 2009

தமிழ்!

மல்லிகைப் புன்னகை
மந்திரக் கண்ணகை
மயக்கும் நம்மனத்தை! -தமிழ்
சொல்லிய சொல்வகை
மாணிக்கக் கல்வகை
சுட்டிடுந் தீக்குணத்தை! -தமிழ்
வீசிய வெண்பரல்கள்! -புவி
வெல்லுந் திருக்குறள்கள்! -தமிழ்
பேசிய பேச்சொலிகள்! -முகம்
வீசிடும் மூச்சொலிகள்! -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

வேரடி, மொழி
விருந்தடி என
வெய்ய னீன்ற மகளோ? -இந்தப்
பாரடி எங்கும்
பரவடி எனப்
பரமன் சொல்லின் துகளோ?
காலக் கணக்கில்
அகப்படாத வயதோ? -இந்த
ஞாலத் தோளை
நனைக்கவந்த புயலோ? -இவள்
பெற்றவை ஆயிரம்
மொழிக் குழந்தை
கற்றவர் சொல்லிய மருந்தை
நற்றவம் செய்திதை
நாமடைந்தோம்
நாளும் அமுதமே அருந்த -தமிழ்
தேனோ? பாலோ?
தேவதை தானோ? (மல்லிகை)

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 6 மார்ச், 2009

மலைமணிச் சோதியன்!

மலையாய் வளர்ந்தும்
உளியால் உடைந்தும்
சிலையாய்ப் பிறந்த
சிவனுருவே!

முடியாய் உயர்ந்தும்
முதிலாய் எழுந்தும்
படியாய்க் கிடக்கும்
பரம்பொருளே!

மண்ணால் மறைந்தும்
மணி,பொன் கரந்தும்
தண்ணார் முகிலுடை
தரிப்பவளே!

அண்ணா மலையென
அக்கினி உலையென
பொன்னார் மேனியின்
புறவுருவே!

பைந்தமிழ்ப் பாவலர்
மீசைகள் மூலிகை
பனியுடல் முடியெனச்
சுமப்பவனே!

பாறைக ளாயிரம்
கீரைக ளாயிரம்
பாவயருக் குதவிடும்
பரமனமே!

தலைகளில் அருவியும்
தரங்கிசைச் சுருதியும்
வயல்களில் மணியுமாய்
வளர்பவனே!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 2 மார்ச், 2009

குறளை பேசாதீர்!

கேட்டு வாங்கியும் போட்டு வாங்கியும்
கீழைமை பேசுதல் முறைதானா?
காட்டு மன்பினில் கயைப் பூசுதல்
கண்ணிய முடையார் செயல்தானா?

நட்ட நட்பினில் நஞ்சைக் கலப்பதா?
நல்லதைச் செய்திட முடியாதா?
உட்பகை யோடும் உறவு பேசுதல்
உயர்ந்தவர் நெஞ்சம் கடியாதா?

குட்டிச் சொல்வதும் தட்டிக் கேட்பதும்
நட்டவர்க் குரிய நயமாகும்
ஒட்டிப் பேசியே உறவைச் சாய்ப்பதால்
உமக்கும் எமக்குமெப் பயனாகும்?

முட்டியைத் தூக்கும் முனைப்புறு பேச்சால்
முகமும் அகமும் கெடுகிறதே
வெட்டுதல் எளிதே விளைவிப்ப தரிதே
வெண்மலர் நெஞ்சும் சுடுகிறதே

வஞ்சகச் சிரிப்பும் வாய்மொழிச் செழிப்பும்
அஞ்சனம் பூசுதல் அறியாமல்
தஞ்சமென் றிருக்கும் தண்மலர் மனத்தைத்
தடியா லடித்தபதுந் தகுமாமோ?

பொருளால் செய்யும் உதவியை மட்டும்
புகழ்ந்தே திரிவது புல்லறிவு
அருளால் மனமொழி அன்பால் உதவுதல்
ஆண்டவன் கொடுத்த நல்லறிவு!

நன்றியின் வித்து நல்வினை ஒழுகல்
நம்குற ளாசான் சொல்லாகும்
குன்றியின் முகம்போல் குறுகுளத் தார்க்குக்
கொடுத்தநன் மலரும் முள்ளாகும்

தானே வளர்த்த மேழத்தை அறுத்துத்
தானே உண்பதன் அருளாட்சி
வானே வருமென வாழ்பவர் செயலால்
வறியோர்ப் பயணமே இருளாச்சி!


கொண்டது விடாத குணங்குறி தொடாத
மண்டுகள் வாய்மொழி மந்திரமா?
கண்டுடன் கன்னலும் கடித்தால் சுவைதரும்
கருத்தறி யாருளம் எந்திரமா?

கூவி அழைத்ததும் குக்கலைப் போல்வரும்
ஆவியை வெகுள்வது அறியாமை
நீவிய விரல்களே நீள்விழி பாய்வது
நெருநல் கேளறம் புரியாமை!

பாத்தென்றல்.முருகடியான்

வியாழன், 26 பிப்ரவரி, 2009

படிப்படியாகப் படியேறு!

இருவரிக் குதிரை
ஏறியமர்ந்தால்
குருவரி நீ, மதி
குடைப்பிடிக்கும்!

நூலடி நடந்து
பார்த்தவருக்கே
காலடி கணக்கைக்
கண்ணறியும்!

அகத்தை அறிந்தால்
அண்டவெளியெனும்
புறத்தைப் புரிந்திடப்
புலன்கிடைக்கும்!

ஏலக் காயால்
இவ்வுடல் சிறக்கும்
ஏலாதி யாலுளம்
எழுந்துநிற்கும்!

திரைப்படத் துறையால்
நரைப்படும் மனமும்
முறைப்பட நன்னூல்
முகம்பார்ப்போம்!

ஒல்காப் புகழில்
உயர்ந்திட நினைத்தால்
தொல்காப் பியரின்
துணைசேர்ப்போம்!

அருந்தொகை யாக
அகவாழ்விருக்க
குறுந்தொகை கற்போம்
குலம்சிறக்கும்!

மெஞ்ஞா னத்தின்
மேன்மைவிளக்கிடும்
மென்பொருள் போன்றது
திருமந்திரம்!

விஞ்ஞா னத்தின்
வெற்றித் திறவுகோல்
வியனுல களித்த
மின்னெந்திரம்!

மும்மணி நாண்மணி
கோவை உலாவுடன்
பன்மணித் திரளாம்
சிலம்பணிக!

மூதுரை கேட்டு
நல்வழி நடந்தால்
வாதுரை செய்திடும்
வாக்குண்டாம்!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 21 பிப்ரவரி, 2009

பறவைகளே!

பட்டுச் சிறகை விரிக்கின்றீர்
பவள அலகால் கொறிக்கின்றீர்
எட்டுத் திசையும் பறக்கின்றீர்
இன்னிசைத் தேனைச் சுரக்கின்றீர்

கேள்விக் குறிபோல் சிலமூக்கு
கிளருங் கால்களில் உகிரூக்கு
வாள்போல் அலகுடன் வாயாச்சி
வான்வெளி பறப்பதும் ஆராய்ச்சி

நெல்லிக் காய்போல் தலைகொண்டீர்
நீள்மரக் கிளைகளில் துயில்கொண்டீர்
பள்ளிக் குழந்தைகள் போலாகிப்
பகல்வரு முன்னே பறக்கின்றீர்

கையை விரித்துக் கால்மடக்கிக்
கண்படுந் தூரம் பறந்துவிட்டு
பையவே மண்ணில் இறங்குவதைப்
பார்த்தே படைத்தார் வானூர்தி

துமுக்கிப் பேரொலி கேட்டவுடன்
துடித்துப் பறக்கும் பறவைகளே
தமுக்கித் திரியா நற்குணங்கள்
தாங்கிய நீங்களும் உயர்திணையே!

கழுகைக் கண்டால் அஞ்சுகின்றீர்
காதலில் குஞ்சினைக் கொஞ்சுகின்றீர்
பழுதறி யாமல் வாழ்கின்றீர்
பகுத்தறி வாளரை ஆள்கின்றீர்!

பாத்தென்றல் முருகடியான்

திங்கள், 16 பிப்ரவரி, 2009

நிலவேசொல்!

மையாடைக் குள்ளுடலை
மறைத்திருக்கும் வெண்ணிலவே!
ஐயாஅச் செங்கதிரோன்
அனலணைக்கும் பொன்னிலவே!

கார்குழலை வானாக்கி...
கதிரொளியை முகமாக்கி...
ஊர்புகழ வரும்நிலவே!
உன்னிடத்தில் சிலகேள்வி!

உப்பலத்தில் பூவதைப்போல்
உயர்வானில் மீன்கூட்டம்...
அப்பளம்போல் நீபுடைக்க
அடுப்பெதுவோ? நெய்யெதுவோ?

நெருப்பிட்ட பானைநீர்
நெருப்பைப்போல் கொதித்திருக்க
வெறுப்புற்றுக் கதிர்க்கனலை
வெளிக்காட்டா வியப்பென்னே?

அல்லிப்பூ நீமலர்த்த...
முளரிப்பூ கதிர்மலர்த்த...
வெள்ளிக்காய் எம்மலரும்
விரியாத வியப்பென்னே?

பசிக்குணவே இல்லாமல்
பலகோடி பேர்மடிய
விசுக்கெனவான் கோளனுப்பும்
வீண்செலவு ஏன்நிலவே?

மண்ணம்மா பெற்றதுதான்
மானிடமும் பயிரினமும்
உண்ணுங்கள் எனக்கொடுக்க
ஒருவருக்கும் மனமிலைஏன்?

விண்ணம்மா விடமிருக்கும்
விழுப்பொருளைத் திருடுதற்(கு)
இன்னும்மா னிடம்முயலல்
ஏனம்மா? சொல்நிலவே!

நாய்களுக்கு மெத்தையிட்டு
நளபாகச் சோறுமிட்டு
மாய்கின்ற மனிதருக்கு
மணிச்சோறு தராததுமேன்?

பெண்ணுக்கு நீயுவமை!
ஆணுக்குப் பகலுவமை!
மண்ணுக்குள் பெண்ணாணின்
மதிப்பொன்றாய் சொல்லுவதுமேன்?

பாத்தென்றல்.முருகடியான்

வியாழன், 12 பிப்ரவரி, 2009

அறம்!

திருவள்ளுவர் திருவிழாவில் பாமலர் சொரிதல் நிகழ்வில் பாமலர் சொரிபவர் முருகடியான்!

அள்ளிக் கொடுக்கும் அறக்கொடையர் ஐயா ஜலீலும் சோதிமணி
நெல்லிக் கனிபோல் வாழ்நாளை நீட்டும் உணவிடும் செல்லப்பா
வெள்ளித் தமிழ்த்தேர் வருவதுபோல் விளங்கும் வேங்கடர் நவாசுடனும்
ஒள்ளொளிர் நுண்கலைக் கழகத்தார் உயர்மணி மாண்புறு மதியழகர் (அவர்கள்)

அறுவரின் அருள்மனத் தருஞ்செயலால் அலர்ந்தது வள்ளுவத் தேவர்விழா
செருவர நேரினுஞ் செய்தநன்றி செப்பிட மறுப்பவர்க் குய்விலையாம்
திருநெறி குறள்நெறித் தேர்வதனைத் திரித்திடல் தமிழறம் மறையுமென
ஒருமுறை முதலறம் நன்றிநொன்னேன் ஒழுகற வாணரின் திருமுன்னே

பாயிரம் நீக்கிய ஈரறத்தைப் பகர்ந்தார் வள்ளுவர் அறப்பாலில்
ஆயிரம் அறங்களில் இல்லறமே அகிலம் உய்வுறும் முதலென்றார்
காயுங் கனியும் உண்டலுத்துக் கசந்ததும் மேற்கொளல் துறவறமே
ஓயும் உடலுயிர் உள்ளவரை உலகியற் கேற்றதவ் வறமென்றார்

நூற்றுப் பதின்மூன் றதிகாரம் நுவலும் அறத்தை வலியுறுத்தி
ஏற்றி ஓரதி காரத்தில் இயம்பிய அறங்களைக் கற்றறிந்தால்*
காற்றைப் போல்மனம் மாற்றமுறும் கடவுள் அருளறம் தோற்றமுறும்
ஆற்றைக் கடந்திட முடியார்க்கும் அலைகடல் தாண்டவும் கலந்தோன்றும்

செல்லரிக் கின்ற மரம்போலும் செந்தமி ழழிக்கும் பிறமொழிகள்
கொல்லரி வாளை முத்தமிடும் குணமிருக் கின்ற அறிவிலிகள்
நெல்லரிக் கட்டுகள் சுமப்பதுபோல் நிமிர்பதர் சுமப்பதில் அறமில்லை
வெல்லரி மாவினம் வீழ்ந்தழிய வீண்முழக் கிடுவதும் அறமில்லை

கூடித் தின்றதும் பறந்துவிடும் குருவிக் கூட்டென வாழுவதும்
வாடித் தவிக்கும் தமிழ்ப்பயிர்க்கு வாய்க்கால் வழிகளை மூடுவதும்
பேடிக் கைவாள் போலிருக்கும் பேரிலக் கியப்புகழ் பாடுவதும்
நீடிக் கும்நிலை மாறாமல் நிழல்தான் தமிழறம் நிலையில்லை

ஈதல் இசைபட வாழ்தலறம் எதிலும் நடுநிலை தேர்தலறம்
சாதல்; வருமெனத் தெரிந்தாலும் சான்றோர் சொல்செயல் சார்தலறம்
காதல் பிறவுயிர் காத்தலறம் கள்ளம் பொய்புலால் நீத்தலறம்
ஆதன் வீடுற வேண்டுமெனில் அன்பின் வழியுயிர் சேர்த்தலறம்

வேரை அழுகிட விட்டுவிட்டு விரிகிளை இலைகளில் நீர்தெளித்தே
ஊரை ஏய்க்கிற நம்செய்லால் உலகில் குறளறம் உயர்வதுண்டா?
காரைக் களைகளை நீக்காமல் கழனியிற் பயிரிடும் உழவருண்டா?
தேரைக்(கு) ஆண்டவன் உணவளிப்பான் தேன்தமிழ்ச் சொல்லறம் யார்வளர்ப்பார்?

இனியவை கூறி விருந்தோம்பி இன்னா செய்வதை விடுதலறம்
முனிவதை அடக்கித் தவமியற்றி முழஒப் புணர்வதைத் தொடுதலறம்
அணியணி யாய்த்தமிழ்ச் சொல்லழிவை அகிலத் தமிழினம் தடுத்தலறம்
மணிமணித் தமிழ்ப்பெயர் மறையாமல் தக்களுக் கிடுவதே மானமறம்

பாலுந் தேனும் பழச்சாறும் பருகிக் கொழுத்த பாம்புகளை
நாளும் வளர்க்கும் தமிழினமே நரியறி வடிமை ஆனிரோ?
காலுந் தலையுந் தெரியாமல் கால்நடை மேய்த்து வந்தவரைத்
தோளில் சுமப்பதை விடமறுத்தால் தொல்லறம் தமிழறம் வாழ்ந்திடுமா?

வரிசைப் பிடித்தன கொண்டாட்டம் வளர்தமிழ் நிலைதான் திண்டாட்டம்
அரிசியை நீக்கிய உமிநாட்டம் ஆகா தெனப்பகை பழிநாட்டம்
பரிசைப் புகழ்பெற வம்பாட்டம் பகுத்தறி வோமுயற் கொம்பாட்டம்
இரிசை நீக்கிட எழமாட்டோம் இன்தமிழ் அழிவதற்(கு) அழமாட்டோம்!

ஈன்றாள் பசித்துயர் கண்டாலும் இழிச்செய லாலதை நீக்காதே
தோன்றாத் துறைகளை முடித்தாலும் துளியுஞ் செருக்குளஞ் சேர்க்காதே
நான்தமி ழினமென நடிப்பாரை நம்பியுன் ஆற்றலை இழக்காதே
வான்றமிழ் வள்ளுவர் வழங்கறங்கள் வாழ்வது வண்டமிழ் வழக்காறே!


* -அறன்வலியுறுத்தல்

பாத்தென்றல்.முருகடியான்!

புதன், 11 பிப்ரவரி, 2009

நீடுவாழ நெறிவேண்டும்!

நாலும் நடந்து முடிந்த பின்னே
ஞானம் தலைக்கு வந்ததே! -அந்த
ஞானத் தாயின் கண்ணை மூட
நரையுந் திரையும் முந்துதே!

முறுக்கு கொண்ட கையும் காலும்
செருக்கைத் தூக்கி நடந்தன... -குருதிப்
பெருக்கை இழந்த உடலைத் தாங்குந்
தடியில் லாமல் கிடந்தன...

கல்லைத் தின்றுச் செரிக்கும் வயதில்
குயவன் நினைவுத் தோன்றிடா! -முத்துப்
பல்லை இழக்கும் வரையில் அந்தப்
பகலன் அருளை வேண்டடா!

அணையைக் கட்டித் தடுத்தி டாமல்
ஆற்று வெள்ளம் பாய்ந்தது! -முற்றிக்
கனியும் முன்னம் வெம்பிச் சுருங்கிக்
காலன் காலில் சாய்ந்தது!

போட்டி போட்டுப் புலனை ஆட்டுப்
பொறியி லிட்டுச் சுற்றினோம்! -மதி
பூட்டுப் போடும் திறனில் லாமல்
பொய்யைத் தானே பற்றினோம்!

நகைய ணிந்த காதும் மூக்கும்
பகைக ளாகிப் போயின... -நேற்று
வகைவ கையாய்க் காட்சி கண்ட
விழிகள் இருள லாயின...

குன்று தூக்க நின்ற தோள்கள்
செண்டு தூக்க அஞ்சின... -இன்றும்
பண்டி ருந்த பசுமை தேடி
உறுப்ப னைத்தும் கெஞ்சின!

கோடு தாண்டிப் போன தாலே
இராம காதை வந்தது! -மாந்தர்
நீடு வாழப் பாடஞ் சொல்லச்
சுழலு முலகப் பந்திது!

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

நடுவு நிலைமை!

ஆங்கிலம் பேசு சிங்கிலம் வேண்டாம்
அரசே சொல்கிறது! -நம்மைத்
தாங்கிய தமிழைத் தணலி லெறிந்துத்
தமிங்கிலம் வெல்கிறது!

கடமை என்றாலும் தந்தையும் மகனும்
காட்டுக நன்றியென்றார்! -அந்த
உடைமையைத் தூக்கி உதறுதல் தமிழ்த்தாய்க்(கு)
உதவுதல் ஆகிடுமா?

மொழிகளைப் பிரித்து முரண்பகை வளர்த்து
மோதுவ தெதனாலே? –உண்மை
வழியறி யார்ப்பிறர் வாய்மொழிக் கலப்பதன்
வழிசெலல் அதனாலே!

செந்தமிழ் எழுதிப் பேசு என்போரிடம்
சினம்பகை உறுவதுமேன்? –என்றோ
வந்தவர்ப் பழிவழி வாழ்ந்து வதங்கிய
வழக்கத்தின் நிலையாலே!

தாடியை மம்மியை நீக்கெனச் சொல்வது
தாடியின் மேல்பகையா? –உன்தாய்
வாடிடு வாளென வழக்குரைத் தாலவர்
வன்பகை யாளர்களா?

உன்னுரி மைக்கெட ஒருப்படு வாயா?
உன்குடி உயர்ந்திடுமா? –தாயவள்
தன்னுரி மைக்கெடத் தன்மகன் நினைப்பது
தமிழுக்குச் சிறப்பிடுமா?

கழிவைக் கொட்டிடும் குப்பைத் தொட்டியாய்க்
கனித்தமி ழாகுவதோ? –அந்த
இழிவைச் செய்திட வேண்டா மென்பவர்
எரிதழல் வீழுவதா?

மொழியறி யாதவர் எழுதுக என்றிங்(கு)
யாரடித்தார் கொல்லோ? –எந்தப்
பழியையும் நீக்குதல் பகுத்தறி வென்பதைப்
படித்தறி யாக்கல்லோ?

கெடுப்பவர் கெடுப்பவை யாரெவை என்பதைக்
கேட்டுண ராவரையில் -நம்மை
அடுத்தவர் பகையுற(வு) என்பதை அறிந்திடும்
அறிவுக்(கு) இரும்புத்திரை!

குளத்தைப் பகைத்தவன் கால்கழு வாமலே
கோவிலுள் போவதனால் -அந்தக்
குளத்துக்குக் கேடெனும் கோள்விடு! நடுநிலைக்
குணமடை வாயதனால்!

பாத்தென்றல்.முருகடியான்.

சனி, 31 ஜனவரி, 2009

முப்பாலில் கடைந்த நெய்!

ஓரேழு அசைகள் கொண்டே
உருவான பொதுநூற் கண்டை
ஈரேயும் இரண்டு பேறும்
இனியகுறள் வாழ்வால் சேரும்!
ஓரேயுப் பிறவிக் குள்ளே
ஒண்டாது துயரச் சொல்லே!
பாரேயும் படித்தற் கென்றே
பயந்தாளே தமிழ்த்தாய் அன்று!

முப்பாலில் கடைந்த நெய்நூல்
மூதண்ட மளந்த மெய்நூல்
ஒப்பாதல் இதற்கொண் றில்லை
உலகுக்கோர் அறப்பூங் கொல்லை!
உப்பாலை கடல்சூழ் வையம்
ஓதத்தேன் குறளால் உய்யும்!
எப்பாழும் இதனால் நையும்
எழுதியதெம் தேவன் ஐயன்!

பசும்புல்லும் உயிர்கள் யாவும்
படைக்கின்ற மூலம் தன்னை
விசும்பின்நீர், அமுதம் என்றே
விளம்பியவன் குறளா சானே!
குசும்புள்ள இன்பப் பாலைக்
குடித்தாடிப் பொருட்பால் தேட
அசும்பில்லா அறக்கோல் இந்த
அகிலத்தில் குறள்போல் ஏது?

பத்துப்பா தலைப்பிற் கென்று
பழச்சாறு பிழிந்த தைப்போல்
எத்திக்கும் மாந்தர் நெஞ்சம்
ஏற்கின்ற பொதுமைச் செங்கோல்
வைத்துள்ள வள்ளு வம்தான்
வானோர்க்கும் பிடித்த நன்னூல்!
தித்திக்கும் தேன்பா லாக
தேவர்சொற் குறளே மெய்நூல்!

தங்கப்பூர் தமிழ்த்தாய் வாழும்
தாமரைப்பூ, தக்கார் ஆளும்
சிங்கப்பூர் ‘அதிபர் நாதன்’
சிலைதிறக் கின்ற இந்நாள்
இங்குற்ற தமிழர்க் கெல்லாம்
எழுச்சிநாள் இனியப் பொன்னாள்!
பொங்கட்டும் குறள்போல் ஆட்சி
பொழியட்டும் ஐயன் போற்றி!

பாத்தென்றல்.முருகடியான்

திங்கள், 26 ஜனவரி, 2009

மாலை மயக்கம்!

நேற்றெறிந்த மாலையொன்று
தெருவில் கிடந்தது! -வீடு
மாற்றிக்கொண்டு கதிரும்மாலை
மலைமறைந்தது!

சூடுபட்ட மாலைக்காய்ந்து
சுருங்கிவிட்டது! -அந்த
ஏடுதொட்டுக் காற்றசைக்க
மாலைநெளிந்தது!

விளக்கிலாஅத் தெருவிலொருவன்
நடந்துவருகிறான்! -பாம்பு
விழுந்தசைந்து கிடப்பதாக
எண்ணிமருள்கிறான்!

தாண்டிப்போகத் துணிவுமின்றித்
தவித்துநிற்கிறான்! -அச்சம்
தீண்டித்தீண்டி உயிருமுடலும்
துடித்துநிற்கிறான்!

அந்தநேரம் வந்தஒருவன்
கையில்விளக்கொளி! -பட்டு
அரவம்மாறி மாலையாகி
தந்ததறிவொளி!

ஞானமென்ற வெளிச்;சமின்றி
நடக்கும் போதெல்லாம் -உண்மை
நாமறிந்து கொள்வதில்லை
வாழும்நாளெல்லாம்!

நீரைமூடிக் கொண்டிருக்கும்
மண்ணைப்போன்றது! -நமது
நிழலைப்போலுந் தொடருகின்ற
இருளின்இனமது!

பாத்தென்றல்.முருகடியான்

புதன், 21 ஜனவரி, 2009

மரங்களும் மாந்தரும்!

ஓரறி வுயிரும் ஆறறி வுயிரும்
ஒன்றெனப் பேசும் ஏழறிவர்
தேரறி வின்றித் திரைதரும் புகழால்
தேவன் திருக்குறள் தீதென்பார்!

மரம்தரும் பயனிலும் மாந்தன் தருவான்
மாந்தன் தருவதை மரம்தருமா?
நிரந்தர நிலைப்பு நிலத்துடன் பிணைப்பு
நிழல்பழம் தருவது மரத்தியல்பு!

கொல்வினை செய்யும் கொடுங்குணம் மாறி
நல்வினை செய்வார் மாந்தரினம்!
முள்ளுடல் மரங்கள் முட்களை நீக்கி
முறையுடல் பெறுமா மரங்களினம்?

ஆல மரம்போல் விழுதுகள் விடஓர்
அரச மரத்தால் முடியாது
காலங் காலமாய்க் கசந்திடும் வெம்பதன்
கனிச்சுவை மாற்றிடும் அறிவேது?

கதவும் கட்டிலும் காய்ந்தால் தரும்மரம்
உதவும் மாந்தரின் உணர்வுறுமா?
பதறும் பசிவரப் பரிந்தொரு பழந்தரப்
பணிதல் குணமந்த மரம்பெறுமா?

தங்கால் நிழலில் தங்கிய மாந்தரின்
தலைவிழுங் காயைத் தடுத்திடுமா?
வெங்கனல் தாங்கும் கிளையுடன் இலைகள்
விரிகுடை போல்நிழல் கொடுத்திடுமா?

தறித்தால் பறித்தால் தரும்பய னன்றித்
தானே கொடுத்திடும் மரமுளதா?
கொறித்தால் எரித்தால் கொதித்தெழு மியல்பு
கொடுத்தால் பெறத்தகுந் திறமுளதா?

பாட்டியின் பசியை ஓட்டிட உலுக்க
பழநி முருகனே வரவேண்டும்
ஈட்டிய நெல்லி இன்கனி யீந்தான்
என்பதில் அறிவைப் பெறவேண்டும்!

ஊக்க மிழந்த மாந்தருக் குவமை
மாக்களைப் போன்ற மரமாகும்
பூக்களைக் கொய்தால் குருதி வராது
பூந்தமிழ்க் குறள்சொல் அறனாகும்!

வீரிய மெடுத்து விதையுண் டாக்கும்
கூரிய அறிவு மாந்தருக்கு
நேரிய தன்றி நிறஞ்சுவை மாற்றும்
நெறிமன மில்லை மரங்களுக்கு!

நயன்மர மென்றும் பயன்மர மென்றும்
நவின்றவன் ஐயன் நாமறிவோம்
அயனவன் படைப்பை அழுக்காக் கிடவா
அருங்குறள் படைப்பான் வாலறிவன்

பகுத்தறி வில்லாப் பயிர்களும் விலங்கும்
பயன்பட வந்தன மாந்தருக்கு
நகுத்துரைப் பாவால் நக்க லடிப்பார்
நாக்கிலும் வாக்கிலும் நரகழுக்கு!

அரம்போல் கூரறி வுடையா ராயினும்
மரம்போ லாகிறார் பண்பிழந்து
புறம்போய்ப் பழித்துரை புகல்வார் இகழ்வார்
பொய்நகை புரிவார் அன்பிழந்து!

அஃறினைப் பொருளை உயர்தினைக் குவமை
ஆக்குதல் வழக்கு மரபாகும்
எஃகதன் கூர்மை பொருள்தரு மென்றே
இசைப்பதும் ஐயன் குறளாகும்!

கொடியிடை எனநாம் குறிப்பதற் காகத்
தடியெடுத் தோரைப் பார்த்தோமா?
வடிவுடை முகத்தை வான்நில வென்றால்
வம்பிழுத் தெவரும் ஆர்த்தோமா?

பாத்தென்றல்.முருகடியான்

வெள்ளி, 16 ஜனவரி, 2009

மண்ணேகேள்!

ஆழி யாற்றைக் கட்டிக் கொண்ட
அழகு மண்ணம்மா! -உன்
அடிவ யிற்றில் நெருப்புக் குண்டம்
இருப்ப தென்னம்மா?
வாழி போற்றி நாங்கள் பாட
மகிழும் மண்ணம்மா! -கொடு
வாய்தி றந்து நெருப்பு வாந்தி
எடுப்ப தென்னம்மா?

சின்ன கொண்டை பெரிய கொண்டை
மலைக ளானதோ? -நீ
சீறும் போது வேர றுக்கும்
அலைக ளானதோ?
வண்ணங் கொண்ட குன்ற னைத்தும்
மார்ப கங்களோ? -அதில்
வழிந்து சிந்தும் அருவி எல்லாம்
பாற்சு ரங்களோ?

மாழை நூறு மடிசு மந்து
மலர்கள் பூக்கிறாய்! -அதை
மனிதன் தோண்டி எடுக்கும் போது
பொறுமை காக்கிறாய்!
ஏழை நாங்கள் தூங்கும் போது
எட்டி உதைக்கிறாய்! -உன்
இனிய மக்கள் உயிரை உடலை
ஏனோ புதைக்கிறாய்?

மேனி எங்கும் மயிர்க ளாக
பயிர்க ளானதோ? -அதை
மேய்ந்தி ருக்க வாழ்ந்தி ருக்க
உயிர்க ளானதோ?
தானி யங்கும் தன்மை அந்தத்
தலைவன் தந்ததோ? -எங்கள்
தமிழும் அந்த முறையில் தோன்றி
நிலைத்து நின்றதோ?

உனக்குக் கூட நொடித்துப் போகும்
கால முள்ளதோ? -உன்
உறவை நம்பும் மனிதப் பயிரை
அழித்தல் நல்லதோ?
கணக்கில் லாமல் உயிரைத் தாங்கும்
காதல் கண்ணம்மா! -எம்
கால்மி திக்கப் பொறுத்த ருள்க!
நன்றி மண்ணம்மா!

பாத்தென்றல்.முருகடியான்

சனி, 10 ஜனவரி, 2009

குயில் அண்ணன்!

வேரை மறந்த
விழுதுக லாகி
வீணே கழிக்கின்றார் நாளை! -சில
விளைச்சல் சுண்ணாம்புச் சூளை! -தமிழ்த்
தேரை இழுத்திடுந்
தாம்புக ளானால்
தமிழ்,மலர்ப் பூத்திடுஞ் சோலை! -அதில்
தங்குந் தமிழ்க்கதிர் காலை!

வண்ணம் படித்திட
எண்ணம்வந் தால்கவி
அன்னம் நடந்திடும் பாட்டில்! -குயில்
அண்ணன் பிறப்பானின் நாட்டில்! -புதுத்
தென்னங் குரும்புகள்
முற்றிக் கனிந்திடத்
தேவன் திருக்குறள் ஏட்டில்! -கற்றுத்
தேர்ந்திருப் போம்கவிக் கூட்டில்!

என்னை நன்றாய்
இறைவன் செய்தனன்
தன்னைத் தமிழ்செயு மாறாம்! -அந்தத்
தத்துவ மேதமிழ் வேராம்! -தமிழ்
அன்னை நிலைப்பதும்
அழியா திருப்பதும்
அவளுக்கு நம்கை மாறாம்! -இதை
அறிந்தால் தமிழ்பெறும் பேறாம்!

பாத்தென்றல்.முருகடியான்!

செவ்வாய், 6 ஜனவரி, 2009

குழப்பம்!

எங்கே மாந்தன்
துயருற் றாலும்
என்மனம் துடிப்பதுமேன்?
அங்கே அவரவர்
உறவென மாறி
விழிநீர் வடிப்பதுமேன்?

குண்டுகள் வெடித்துத்
துண்டுகள் ஆகிக்
குலையும் மாந்தரினம்...
ஒன்றுமே செய்திட
முடியா தின்னுயிர்
உடலேன்? அவமானம்!

வாடிய பயிரால்
வாடிய மனதில்
வன்மம் உறைவதுமேன்?
தேடிய உறவும்
திருவும் திறனும்
தேய்ந்தே மறைவதுமேன்?

விடுதலைக் காக
உயிர்விடத் துடிக்கும்
விறலார் ஒருபுறமும்
கெடுதலைச் செய்தே
புகழ்பெற நினைக்கும்
கீழோர் மறுபுறமும்...

மாந்தர்க ளாக
ஈந்தவர் யாரோ?
மலர்மே லுற்றவனோ?
நீந்திய இலைமேல்
நின்று வளர்ந்து
நெடுமா லானவனோ?

அரக்கரின் கொட்டம்
அழித்திடும் கண்கொண்(டு)
அரனார் வரவென்றோ?
சுரக்கிற முலைப்பால்
எதியோப் பாவில்
சூலியுந் தரலன்றோ?

அறிவதன் வளர்ச்சி
அணுவென வெடிச்சி
அழிவே வரலாறு!
பொறிபல நூறு
பூத்தநற் பேறு
புன்மையே பெருங்கூறு!

மறக்கப் படமனம்
வைத்தவன் ஏனோ
மடிக்கும் மதிகொடுத்தான்?
இறக்கும் உடல்!உயிர்
எடுக்கும் மறுவுடல்
என்றேன் விதிபடைத்தான்?

பாத்தென்றல் முருகடியான்!

வியாழன், 1 ஜனவரி, 2009

கேள்போல் பகை!

ஒன்றுபட மாட்டார்; உருப்படவும் மாட்டாமல்
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! -மண்டுகளாய்
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்
தண்டுகளைத் தண்மலரென் பார்!

மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? -தாவடிமைப்
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்
தட்டேந்து வார்தமிழ ரே!

தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு -மட்டிகளாய்
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்
மண்ணே மறத்தமிழர் மண்!

சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் -வீரியமே
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை
நல்லாராய் நம்புவதேன் நாம்?

ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் -பாதிக்கப்
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!

பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் -கள்ளமுடன்
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்
காற்றைக் கயிறாக்கல் காண்!

பாத்தென்றல்.முருகடியான்